முதல் 100 மணி நேரம்… ஈரான் போருக்காக அமெரிக்காவின் அதிரவைக்கும் தினசரி செலவுகள்

ஈரானில் அமெரிக்காவின் முழு அளவிலான இராணுவ நடவடிக்கை தொடங்கிய ஒரு வாரத்தில் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் பல பில்லியன் டொலர்கள் செலவை ஏற்படுத்தக்கூடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது பிப்ரவரி 28 அன்று தொடங்கப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களுக்கு வழிவகுத்தன.
ஈரானில் இறப்பு எண்ணிக்கை 1,300 ஐ தாண்டிவிட்டதாக அந்த நாட்டிற்கான ஐ.நா. தூதர் மதிப்பிட்டுள்ளார். இஸ்ரேலில் இருந்து தகவல் எதுவும் கசிய வாய்ப்பில்லை என்பதால், சேதம் மற்றும் இறப்பு தொடர்பான தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை குவைத்தில் உள்ள ஒரு தளத்தில் ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆறு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். ஈரான் மீதான இந்த நடவடிக்கைகளுக்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்து தகவல் வெளியிட ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அடிக்கடி அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
இருப்பினும், இராணுவ நடவடிக்கைக்கான உறுதியான செலவை அரசாங்க அதிகாரிகள் வெளியிடவில்லை. இதனிடையே, வாஷிங்டனில் உள்ள தனியார் அமைப்பு ஒன்று முன்னெடுத்துள்ள ஆய்வில், போர் தொடங்கிய முதல் 100 மணி நேரத்தில் அமெரிக்கா 3.7 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளதாகவும், அல்லது 24 மணி நேரத்தில் 891.4 மில்லியன் டொலர் செலவிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மிக முக்கியமான செலவு ஆயுதங்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதாவது 3.1 பில்லியன் டொலர் ஆயுதங்களுக்காக மட்டும் அமெரிக்கா செலவிட்டுள்ளது.
போர் இழப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதம் மொத்தம் 359 மில்லியன் டொலர். செயல்பாடுகள் மற்றும் உதவி செலவுகள் மொத்தம் 196.3 மில்லியன் டொலர். அதாவது ஈரானில் நடந்த போரின் முதல் 100 மணி நேரத்தில் போர்த்துறை சுமார் 3.54 பில்லியன் டொலரை பட்ஜெட்டில் சேர்க்கப்படாத தொகையாக செலவிட்டதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த ஆண்டு பாதுகாப்புக்கு என 900 பில்லியன் டொலர் பட்ஜெட்டை நிறைவேற்றியது. ஈரானுக்கு எதிராக வான்வழித்தாக்குதலுக்கு முதல் 100 மணி நேரத்தில் 125 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் 30 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளது. 200க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதல் 100 மணி நேரத்தில் கடற்படை நடவடிக்கைகளுக்கு 64 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் 15 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளது. விமானம் தாங்கிக் கப்பல்களுக்காக ஒவ்வொரு நாளும் 6 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறது.
அமெரிக்கா இன்னும் ஈரான் மீது தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கவில்லை, ஆனால் டிசம்பர் மாத நிலவரப்படி மத்திய கிழக்கு முழுவதும் உள்ள இராணுவத் தளங்களில் கிட்டத்தட்ட 600 அமெரிக்க வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முதல் 100 மணி நேரத்தில் ஆயுத இழப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதம் ஆகியவற்றால் தோராயமாக 359 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு மதிப்பிடப்படவில்லை. இதுவரையான தரவுகளின் அடிப்படையில் பல பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் மீதான போர் இரண்டு மாதங்கள் நீடிக்கும் என்றால், மக்கள் வரிப்பணத்தில் 95 பில்லியன் டொலர் செலவாகும் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈராக்கில் முன்னெடுக்கப்பட்ட போரில் அமெரிக்க மக்களின் வரிப்பணம் 3 டிரில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் 2003ல் ஈராக் போர் தொடர்பில் புஷ் நிர்வாகம் 60 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
![]()