கடலில் இனிமேல் தாக்குதல் நடைபெறாது என அமெரிக்காவிடம் பகிரங்க உறுதி பெறுங்கள்!; அநுர அரசுக்கு கடும் அழுத்தம்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் இனிமேல் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்பதற்கான உத்தியோகபூர்வ உறுதியை அமெரிக்காவிடமிருந்து இலங்கை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலொன்றினால் ஈரான் நாட்டுப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை தொடர்பில், இலங்கை அரசு தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றமை கவலையளிக்கின்றது. அரசின் இந்த மௌனப் போக்கை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.
இவ்வாறான மோதல் நடவடிக்கைகள் காரணமாக, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயம் ஒரு ‘போர் வலயம்’ போல் மாற்றமடைந்துள்ளது. இது நாட்டின் வணிக நலன்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
மேலும், இவ்வாறான பதற்றமான சூழலால் சர்வதேச கப்பல் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதன் நேரடி விளைவாக இலங்கையில் வாழ்க்கைச் செலவு மேலும் உயர்ந்து, நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
![]()