ஈரான் கப்பலுக்கு அநுரவின் பதில் என்ன?; அரசிடம் நாமல் கோரிக்கை

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) உள்ள மற்றுமொரு ஈரானியக் கப்பல், அவசரமாகத் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரியுள்ளமை தொடர்பில் அரசாங்கத்திடம் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கப்பல் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.
தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது இந்தக் கப்பல் இலங்கையின் ஆட்புலக் கடற்பரப்பிற்கு சற்று வெளியேயுள்ளதாகவும், துறைமுகத்திற்குள் நுழைய அரசாங்கத்தின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் தெரியவருகிறது.
“இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அது உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு முடிவை எடுக்க முடியாவிட்டால், 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைப் போரின் போது முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க பின்பற்றிய இராஜதந்திர நடைமுறையை முன்னுதாரணமாகக் கொள்ளுமாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அன்று இந்தியா தனது வான்பரப்பை பாகிஸ்தான் விமானங்களுக்கு மூடியபோது, சிறிமாவோ பண்டாரநாயக்க நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றி, பாகிஸ்தான் விமானம் ஒன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கினார்.”
அன்று எடுக்கப்பட்ட அந்த முடிவு மனிதாபிமான அடிப்படையிலானது என்றும், அது நட்பு மற்றும் அவசியமான தேவையை அடிப்படையாகக் கொண்டது என்றும் நாமல் ராஜபக்ஷ தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
![]()