இலங்கை

சுரேஷ் சலே 90 நாள்கள் தடுப்புக்காவலில்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை 90 நாள்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்பமாக, சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25ஆம் திகதி பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவரைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாள்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

பிரித்தானியாவின் ‘செனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட சர்ச்சைக்ககுரிய ஆவணப்படத்தில், ஈஸ்டர் தாக்குதலுக்கும் சுரேஷ் சலேவுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதாகப் பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, ‘சமூக மற்றும் சமய நிலையத்தின்’ நிறைவேற்றுப் பணிப்பாளர் வணக்கத்துக்குரிய ரொஹான் டி சில்வா அடிகளார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

2019 ஏப்ரல் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற போது சுரேஷ் சலே மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றி வந்தார். கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவர் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2024 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, தற்போதைய அரசினால் அவர் பதவியிலிருந்து ஓய்வுபெறச் செய்யப்பட்டார்.

கடந்த 2024 நவம்பர் மாதம் கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த விவகாரம் தொடர்பான முன்னேற்றங்களை அறிவித்திருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் தொடர்வதாகத் தெரிவித்திருந்தது.

அந்தத் தொடர்ச்சியான விசாரணைகளின் ஒரு கட்டமாகவே தற்போது இந்த அதிரடி கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இந்த 90 நாள்கள் தடுப்புக் காவல் விசாரணையின் மூலம், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சதிகாரர்கள் மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *