நாமல் உரையாற்றுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஒக்ஸ்போர்ட் யூனியன் தெரிவிப்பு

பாதுகாப்பு காரணங்களுக்காகவே இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வு நிறுத்தப்பட்டதாகவும் இது பின்னர் நடைபெறும் என்றும் ஒக்ஸ்போர்ட் யூனியன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாமல் ராஜபக்ஷ தரப்பு தெரிவித்துள்ளதாவது,
மேற்படி சொற்பொழிவை வழங்க முடியாததற்கு நாமல் ராஜபக்ஷவிடம் மன்னிப்பு கேட்ட ஒக்ஸ்போர்ட் யூனியன், அங்குள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளது.
இந்த திட்டத்தை அன்றைய தினம் செயல்படுத்துவதில் கடுமையான பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு ஆபத்து இருந்ததாகவும், பெரிய அளவிலான போராட்டங்கள் மற்றும் இடையூறுகள் ஏற்படும் என்று நம்பகமான தகவல் கிடைத்திருந்ததாகவும் நாமல் ராஜபக்ஷவிடம் ஒக்ஸ்போர்ட் யூனியன் தெரிவித்துள்ளது.
ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவர் திருமதி கேத்தரின் யங் நாமல் ராஜபக்ஷவுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“தற்போதைய இடர் மதிப்பீட்டின் அடிப்படையில், விருந்தினர்கள், பேச்சாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரங்கின் வரம்புகளுக்குள் செயல்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை. அந்த ஆலோசனையின் அடிப்படையிலும், கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான எங்கள் பொறுப்பை மனதில் கொண்டும், இந்த நிகழ்வை எதிர்காலத்தில் மிகவும் பாதுகாப்பாக நடத்தக்கூடிய ஒரு திகதி வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.”என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் யூனியன் இரண்டினதும் அழைப்பின் பேரில் நாமல் ராஜபக்ஷ தற்போது இங்கிலாந்து சென்றுள்ளார்.
இருப்பினும், புலம்பெயர் தமிழ் மாணவர் அமைப்புகளின் கடுமையான ஆட்சேபனைகளால் கேம்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் யூனியன்களில் நாமல் ராஜபக்ஷ உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வுகள் நிறுத்தப்பட்டதும் தெரிந்ததே .
![]()