இலங்கை

சஜித் எமது கட்சித் தலைவர் அல்லர்; அவரைக் கட்டுப்படுத்தவே முடியாது- மனோ எம்.பி. பகிரங்க அறிவிப்பு!

“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் எமக்கும் இடையிலானது ஒரு தேர்தல் கூட்டணி உடன்படிக்கை மாத்திரமே. அவர் எமது கட்சித் தலைவர் அல்லர். எனவே, அங்கே போகாதீர்கள், இங்கே போகாதீர்கள் என்று சஜித்தை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.”என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நகர்வுகள் மற்றும் கூட்டணியின் சுதந்திரத் தன்மை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“எமது கட்சி தமிழ் முற்போக்குக் கூட்டணி, சஜித் பிரேமதாஸவின் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி. இவை இரண்டும் ஒன்றல்ல. ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலான தேர்தல் உடன்பாட்டிலேயே நாம் இணைந்துள்ளோம். அவர் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற தேசியக் கூட்டணியின் தலைவரே தவிர, எமது கட்சியின் தலைவர் அல்லர். எனவே, ‘அங்கே போகாதீர்கள், இங்கே போகாதீர்கள்’ என அவரை நாம் கட்டுப்படுத்த முடியாது; அவரும் எம்மை அவ்வாறு கட்டுப்படுத்துவதில்லை.”

தற்போதைய அரசியல் சூழலை விளக்குவதற்கு ஜே.வி.பியின் கடந்தகால வரலாற்றை உதாரணமாகக் காட்டிய மனோ எம்.பி.,

“2004 இல் சந்திரிகா தலைமையிலான கூட்டணியிலும், பின்னர் 2005 இல் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கும் அநுர தலைமையிலான ஜே.வி.பி. புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே செயற்பட்டது. அன்று அவர்கள் எப்படி ஒரு கூட்டணியாகச் செயற்பட்டார்களோ, அதேபோன்ற ஒரு நடைமுறையையே இன்று தமிழ் முற்போக்குக் கூட்டணியும் சஜித் தலைமையிலான கட்சியுடன் பின்பற்றி வருகின்றது.

நாடாளுமன்ற வாக்களிப்பின் போது கூட நாம் சுயாதீனமாக முடிவுகளை எடுக்கின்றோம். நாட்டில் நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களே இவ்வாறான அரசியல் கூட்டணிகளுக்குக் காரணமாகின்றன.

குறிப்பாக, தென்னிலங்கையில் சிறுபான்மையாக வாழும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்குத் தற்போதைய சூழலில் இத்தகைய கூட்டணிகளைத் தவிர வேறு மாற்று வழிகள் கிடையாது.” என்று மனோ எம்.பி. சுட்டிக்காட்டினார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *