சுரங்க அகழ்வு, கனிமங்களுக்காக இந்தியா – பிரேசில் ஒப்பந்தம்

உலகளாவிய ரீதியில் நிலவும் மூலப்பொருட்களுக்கான போட்டிக்கு மத்தியில் சுரங்க அகழ்வு மற்றும் கனிமங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரேசிலும் கைச்சார்த்திட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் முன்னிலையில் கைச்சார்த்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் ஊடாக அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளில் 20 பில்லியன் டொலர் வர்த்தகம் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரேசில் ஜனாதிபதி புதுடில்லிக்கு பயணித்திருந்த சமயம் இந்த ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டிருக்கிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து விடுத்துள்ள அறிக்கையில், உலகின் முன்னணி இரும்புத் தாது உற்பத்தியாளர்களில் பிரேசில் ஒன்றாகும். உருக்கு உற்பத்திக்கான முக்கிய கனிமங்களின் விசால இருப்பை பிரேசில் கொண்டுள்ளது. அதனால் அதிகரித்து வரும் உள்நாட்டு உருக்குக்கான மூலப்பொருள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சார்த்திடப்பட்டிருக்கிறது.
பிரேசிலுடனான நெருக்கமான ஒத்துழைப்பு, உருக்கு துறையின் நீண்டகால வளர்ச்சியைத் தக்கவைக்கத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான இந்தியாவின் அணுகலை மேம்படுத்த உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஆய்வு, சுரங்க அகழ்வு மற்றும் உருக்கு துறை உட்கட்டமைப்பில் முதலீட்டை ஈர்த்தல் என்பவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()