உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் விருந்தில் லண்டன் பொலிஸாரின் பாதுகாப்பு; தொடரும் சர்ச்சையால் அரச குடும்பத்திற்கு தலைவலி!

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் 2010-ம் ஆண்டு நியூயார்க்கில் நடத்திய ஒரு இரவு விருந்திற்கு, லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறையின் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கியதாகப் புதிய தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மன்னர் சார்லஸின் சகோதரரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சருக்கு (முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ) பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த இந்த அதிகாரிகள், எப்ஸ்டீனின் வீட்டில் நடைபெற்ற அந்த விருந்தின் போது நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டதாக ‘தி சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ உள்ள மின்னஞ்சல் தரவுகள் மூலம் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2010 டிசம்பரில், எப்ஸ்டீனின் நியூயார்க் இல்லத்தில் ஆண்ட்ரூ தங்கியிருந்தபோது, அவருடன் லண்டனில் இருந்து சென்ற இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் அங்கேயே தங்கியுள்ளனர்.

அந்த விருந்தின் போது, “பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் கதவிலேயே வழங்கப்பட்டுள்ளன” என எப்ஸ்டீனின் ஊழியர் ஒருவர் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பது தற்போது ஆதாரமாகச் சிக்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மெட்ரோபாலிட்டன் காவல்துறை தற்போது தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. கடந்த 2010-ம் காலகட்டத்தில் ஆண்ட்ரூவுடன் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ள காவல்துறை, அந்தச் சமயத்தில் நடந்த ஏதேனும் முறைகேடுகள் குறித்துத் தகவல் தெரிந்தால் முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இருப்பினும், முதற்கட்ட விசாரணையில் அந்தப் பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக எந்தக் குற்றத்திலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவெளை கடந்த வாரம், அரசுப் பதவியைப் பயன்படுத்தி ரகசிய ஆவணங்களை எப்ஸ்டீனுக்குப் பகிர்ந்ததாகக் கூறப்படும் புகாரில் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டு, பின்னர் விசாரணைக்காக விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பிரித்தானிய போலீஸ் அதிகாரிகள், ஒரு பாலியல் குற்றவாளியின் வீட்டிற்குப் பாதுகாப்பு வழங்கியது பிரிட்டன் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த விவகாரம் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு மேலும் ஒரு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *