உலகம்

கியூபாவில் இருந்து கடைசி கனேடிய விமானமும் வெளியேறியது!

கியூபாவில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, கனேடிய விமான நிறுவனங்களின் கடைசி விமானங்களும் கியூபாவை விட்டு வெளியேறியுள்ளதாக கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கியூபாவிலிருந்து இதுவரை சுமார் 27,900 க்கும் மேற்பட்ட கனேடியப் பயணிகள் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அனிதா ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

கியூபாவில் நிலவும் எரிபொருள், மின்சாரம், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் காரணமாக, அந்நாட்டிற்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடா தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏயார் கனடா, வெஸ்ட்ஜெட் மற்றும் ஏயார் ட்ரான்சாட் ஆகிய முக்கிய நிறுவனங்கள் கியூபாவிற்கான தமது சேவைகளை காலவரையறையின்றி நிறுத்தியுள்ளன. கியூப விமான நிலையங்களில் எரிபொருள் கிடைப்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மையே இதற்குக் காரணமாகும்.

அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கியூபாவிற்கு எரிபொருள் வழங்கும் நாடுகளுக்கு எதிராக வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தியுள்ளமை, இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஜனவரி மாத தொடக்கத்தில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவினால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கியூபாவிற்கான எண்ணெய் விநியோகம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கியூபாவில் இன்னும் சுமார் 7,000 க்கும் மேற்பட்ட கனேடியர்கள் இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கியூபாவில் கனேடிய விமானங்கள் தங்கள் சேவையை நிறுத்தியுள்ள போதிலும் ஏனைய சர்வதேச விமான நிறுவனங்கள் மூலம் வணிக ரீதியான சில விமானங்கள் இன்னும் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *