வலிகாமம் வடக்கில் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்கவும்; யாழ்.மாவட்ட செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் படையினரின் வசமுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் யாழ்.மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் நேற்றுத் திங்கட்கிழமை முற்பகல்-10.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் வைத்து மகஜரொன்றைக் கையளித்துள்ளனர்.
வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் எனும் பெயரில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் காணிகளை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியே குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சில அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்குகளும் காணி விடுவிப்புத் தாமதத்துக்குக் காரணமெனக் குற்றம்சாட்டியிருந்தார்.
இதேவேளை, எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் வலிகாமம் வடக்கில் ஒருதொகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
![]()