இலங்கை

பழக்கடை விவகாரத்தால் கலவரமான யாழ்.மாநகர சபை; பிரேரணையை கிழித்தெறிந்த ஈ.பி.டி.பி! முதல்வரின் செயலில் சந்தேகம்?

பழக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாது அசமந்தமாக செயற்பட்ட யாழ் மாநகரின் முதல்வரது செயலைக் கண்டித்த பிரேரணையை கிழித்தெறித்த ஈ.பி.டி.பியியின் உறுப்பினர்கள் சபையின் அமர்விலிருந்தும் வெளிநடப்புச் செய்தனர்.

யாழ் மாநகரின் உறுப்பினர் தர்சானந்தின் பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிராரணையை எதிர்த்து யாழ் மத்திய பேருந்து நிலைய சூழலில் அமைந்துள்ள பழக்கடை வியாபாரிகள் மாநகரை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர்.

இவ்விடயம் குறித்து   சபை அமர்வில் கருத்தை முன்வைத்து உரிய பொறிமுறையின்றி கொண்டுவரப்பட்ட பிரேரணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செயற்படுத்தும் சந்தர்ப்பத்தில் உரிய பொறிமுறை வேண்டும் என்றும் வலியுறுத்தியதுடன் அதற்கான தீர்வை உடன் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆனால் முதல்வர் அவ்விடயத்தை அலட்சியப்போக்குடன் கையாண்டு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சபையை முன்னெடுத்தமையால் ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர்கள் குறித்த பிரேரணையை கிழித்தெறிந்து சபையை விட்டு வெளியேறினர்.

இதேவேளை உரிய பொறிமுறை இல்லாது யாழ் பேருந்து நிலைச் சூழலில் அமைந்துள்ள பழக்கடைகளை அகற்ற யாழ் மாநகர முதல்வர் முயற்சிப்பது மக்களின்  நலன்களை சீர்குலைக்கும் நடவடிக்கையாக இருப்பதாக சுட்டிக்காட்டிய ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி பற்குணராஜா ஒரு குறிப்பிட்ட நபரது பிரபல்யத்துக்காக மாநகரின்  சட்டத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களது கோரிக்கையை மனுவை பெற்றுக்கொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

மாநகரசபை சட்ட வரையறையில் பிரேரணைகளை சபையில் ஏற்றுக்கொள்வது மற்றும்  அனுமதிப்பதற்கான வரையறை இருக்கின்றது.

சபையின் சட்ட வரையறை மற்றும் பிரேரணைகளின் அனுமதித்தல் போன்றவற்றில் சபைக்கு வருமான இழப்பு மற்றும் பாதிப்புகள் ஏற்படுதல் போன்ற ஏது நிலைகள் இருக்குமாயின் அதை நிராகரிக்கும் அல்லது ஏற்றுக்கொள்ளாதிருக்கும் அதிகாரம் முதல்வருக்கு இருக்கின்றது.

அந்தவகையில் சட்ட ரீதியாக வழங்கப்பட்டு வரி வசூலிக்கப்படும் கடைத்தொகுதி விவகாரத்தில் உறுப்பினர் ஒருவரால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் ஏது நிலைகள் குறித்து ஆரயாது அதை முதல்வர் ஏற்றிருப்பது மாநகரின் சட்ட விதிமுறை மற்றும் இருப்பை சவாலுக்குட்படுத்துகின்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும் சட்ட ரீதியாக  வாழ்வாதார ரீதியில் கொடுக்கப்பட்ட இந்த கடைகளை உரிய பொறிமுறையின்றி அகற்றுவதற்காக முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியிருப்பது முதல்வரது செயற்பாடுகளிலும் அவ நம்பிக்கையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.

எனவே மக்களின் நலன் சார்ந்த இந்த விவகாரத்தில் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவாகவே செயற்படும்.குறித்த பிரேரணையை எமது கட்சி எதிர்த்து  மக்களின் நலனை உறுதிசெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *