அல்லைப்பிட்டி சிறுவன் மரணத்துக்கு முழுக்காரணம் இவர்களே – சட்டத்தரணி சிறீகாந்தா சீற்றம்

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், காவல்துறையினரின் கண்மூடித்தனமான மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கையாலேயே நிகழ்ந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
இந்த உயிரிழப்புக்கு காவல்துறையினரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்தச் சிறுவன் சந்தேகத்துக்கிடமான வகையில் வாகனத்தைச் செலுத்திச் சென்றிருந்தாலும், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்குப் காவல்துறையினருக்கு எந்தவிதமான சட்ட அதிகாரமும் இல்லை.
ஒரு வாகனத்தை நிறுத்த வேண்டிய தேவை காவல்துறையினருக்கு ஏற்பட்டிருப்பின், அவர்கள் வாகனத்தின் சக்கரங்களை நோக்கி மட்டுமே துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வேண்டும்.
அதை விடுத்து, ஒரு உயிரைப் பறிக்கும் வகையில் செயற்பட்டது கண்டிக்கத்தக்கது.
இந்தத் துயரமான மரணம் குறித்து முழுமையான மற்றும் நடுநிலையான விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஒரு சிறுவனின் மரணத்துக்குக் காரணமான காவல்துறையினர் எவராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
![]()