இலங்கை

கிபுள் ஓயாத் திட்டம் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்!; தமிழ் மக்களை எச்சரிக்கும் ப.சத்தியலிங்கம்

கிபுள் ஓயாத் திட்டம் வவுனியாவில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு பாரிய பின்விளைவை ஏற்படுத்தக்கூடும்  என நாங்கள் சந்தேகப்படுகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர்  ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிபுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியா பொது அமைப்புக்கள் ஒன்று கூடி கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தது.

வவுனியா தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள்,பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,

இத்திட்டம் தொடர்பாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளது. இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்ப்படவேண்டும் என்று நாங்கள் மாவட்ட அபிவிருத்திக்கூட்டங்களிலும், அமைச்சர்களிடமும் கேட்டிருந்தோம்.

இந்த திட்டம் வவுனியாவில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக தமிழ்மக்களுக்கு பாரிய ஒரு பின்விளைவை ஏற்படுத்தக்கூடிய திட்டமாக நாங்கள் சந்தேகப்படுகின்றோம்.

கிபுள் ஓயாத்திட்டத்திட்டம் தொடர்பாக எமக்கு இருக்கும் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே நாங்கள் அதனை எதிர்க்கின்றோம்.

இது தொடர்பாக அனைத்து தமிழ்கட்சிகளோடும் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தோம். அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர்.

எனவே இன்றையதினம் வவுனியாவில் உள்ள பொது அமைப்புக்களின் ஆலோசனைகளை பெற்றுள்ளோம். அவர்களும் இந்த திட்டத்தை எதிர்க்கவேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளனர்.

வவுனியா வடக்கின் பொதுமக்கள், பொது அமைப்புக்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நாளையதினம் கலந்துரையாடலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். ஏற்கனவே எதிர்வரும் 30 ஆம் திகதி காலை நெடுங்கேணி பேருந்து நிலையம் முன்பாக ஒன்றுகூடுவதாக  தீர்மானித்துள்ளோம்.

அது தொடர்பான இறுதி அறிவித்தலை விரைவில் மக்களுக்கு வழங்குவோம். என்றார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *