உலகம்

ஈரானில் தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டம் ; டிரம்ப் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

ஈரானில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவைத் தொடர்பு கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய இந்தப் போராட்டங்களில், பாதுகாப்புப் படைகளால் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பான HRANA, இதுவரை சுமார் 500 போராட்டக்காரர்களின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிணவறையில் எடுக்கப்பட்ட காட்சிகளை ஆய்வு செய்த பிபிசி, குறைந்தது 180 உடல்கள் வெள்ளைத்துணிகளால் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள். ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே நாம் ஏதேனும் ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டார்.

கடந்த வாரம், ஈரானியப் படைகள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலைத் தொடர்ந்தால், “நாங்களும் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்குவோம்” என அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

போராட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியில் கசிவதைத் தடுக்க, ஈரானிய அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை முதல் நாடு முழுவதும் இணையச் சேவையைத் துண்டித்துள்ளனர்.

இதனால் போராட்டக் களத்தில் நடக்கும் உண்மையான நிலவரங்களைச் சேகரிப்பதிலும், உயிரிழப்புகளை உறுதிப்படுத்துவதிலும் சர்வதேச ஊடகங்களுக்குப் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல் நடத்துவது அல்லது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிப்பது போன்ற கடுமையான முடிவுகள் குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் தனது ஆலோசகர்களுடன் ஆலோசித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *