அமெரிக்காவின் பேராசைகள் உலக ஒழுங்கை சீரழிக்கிறது

எந்தளவு சக்திமிக்க நாடு என்றாலும், சர்வதேச சட்டங்களையும் ஐ.நா. சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாதென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப்ஹக்கீம் கண்டனம் தெரிவித்துள்ளார். வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ்மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோரை சிறைப்பிடித்துச் சென்றமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
நாடொன்றை அபகரிப்பதற்கும் பலவந்த ஆட்சி மாற்றத்திற்கும் சர்வதேச சட்டத்தில் இடமேயில்லை.அமெரிக்காவின் இந்தச் செயலால் உலகமே ஆச்சரியத்தில் உறைந்துள்ளது.லெத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள பல நாடுகளின் இறைண்மைகளை அச்சுறுத்தும் வகையிலே, அமெரிக்கா தொடர்ந்தும் செயற்படுகிறது.இதன் மற்றொரு வடிவமே வெனிசூல மீதான ஆக்கிரமிப்பாகும்.அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் போக்குகள் உலக அமைதிக்கு ஆபத்தாக அமையலாம்.உலகின் எந்த நாட்டுக்கும் சர்வதேச சட்டத்தை மீறும் அங்கீகாரமில்லை.இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலகில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான சவால்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
சுயநல புவியியல்,அரசியல் இலக்குகளை அடைவதற்காக கொடூரமாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், அந்த ஒழுங்கை மேலும் நிலைகுலையச் செய்கின்றன.இன்றைய பூகோள அரசியலில் தற்காலிகமாக மேலோங்கியுள்ள வளங்களை சுரண்டுவதற்கான சில நாடுகளின் பேராசைகள், சர்வதேச சட்ட நெறிமுறைகளுக்கும் , தூதரக நடைமுறைகளுக்கும் முற்றிலும் முரணானதாக உள்ளன. அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகள், ஆட்சி மாற்றத் திட்டங்கள் மற்றும் அபகரிப்பு ஆசைகளே உலக அமைதிக்கு குந்தகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
![]()