வட-கிழக்கு இணைப்பை துண்டித்தவர்கள் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தருவார்களா?; பகல் கனவு வேண்டாம் என்கிறார் கஜேந்திரகுமார்

வடக்கு. கிழக்கு இணைப்பு என்ற விடயத்தை துண்டித்தவர்கள் தமிழ் மக்களுக்கு தீர்வை கொடுப்பார்கள் என்பது பகல் கனவு. தேசிய மக்கள் சக்தி என்பது ஜே.வி.பி.யின் அடிமை
என்பது தெரிகிறது. தேசிய மக்கள் சக்தி இங்கு வெட்டி பிடுங்கப் போவது கிடையாது என்பது வரவர நிரூபிக்கப்படுகிறது. ஜே.வி.பி.யே எல்லாவற்றையும் செய்கிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி. யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் வழங்கிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜே.வி.பி. தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினையை தீர்ப்பதாக இருந்தால் வடக்கையும் கிழக்கையும் கடைசி வரை பிரித்திருக்க மாட்டார்கள். இன்று வரைக்கும் அவர்கள் பிரித்ததை சொந்தம் கொண்டாடுகிறார்கள்.இவர்கள் அரசியலமைப்பை ஏற்று அங்கீகரித்து தீர்வை கொடுப்பார்கள் என்று யாராவது சொன்னால் அதை விட ஒரு முட்டாள்தனம் கிடையாது.
இலங்கையில் சுனாமி அடித்து வடக்கு கிழக்கு பெருமளவில் பாதித்த போது அந்த மக்களுக்கு கணிசமான உதவிகள் கிடைப்பதற்காக அவை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் விடுதலைப் புலிகளை தடை செய்த நாடுகள் கூட அரசாங்கத்திடம் பேசி கொடுக்கப்பட்ட நிதி வெளிப்படை தன்மையாக மக்களை அடைவதற்கான இடத்தில் தான் சுனாமி கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அந்தக் கட்டமைப்பை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று அதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி வடக்கையும் கிழக்கையும் பிரித்தவர்கள் தான் இந்த ஜே.வி.பி. மனிதாபிமான அழிவு, மக்கள் அழிந்து போய் இருக்கும் நிலையில் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச ரீதியில் உதவி போய் சேராமல் தடுத்தவர்களே ஜே.வி.பி.
தமிழ் மக்களுடைய அடிப்படை கோட்பாடு வடக்கு, கிழக்கு இணைந்திருத்தல் ஆகும். அந்த இணைப்பை உருவாக்கும் போது எங்களுடைய முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒரு சில நலன்கள் சார்ந்த பிரச்சினைகள் வரும். அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வடக்கு,,கிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்களின் தீர்வு சம்பந்தமான அடிப்படையான நிலைப்பாடு. அந்த இணைப்பு என்ற விடயத்தை ஏற்படுத்தாமல் தமிழர்களுடைய இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடையாது. அது தீர்வும் அல்ல.
அப்படிப்பட்ட அடிப்படை கோட்பாடாக இருக்கக்கூடிய விடயத்தை துண்டித்தவர்கள் தமிழ் மக்களுக்கு தீர்வை கொடுப்பார்கள் என்பது பகல் கனவு.தேசிய மக்கள் சக்தி என்பதுஜே.வி.பி.யின் அடிமை
என்பது தெரிகிறது. தேசிய மக்கள் சக்தி இங்கு வெட்டிப் புடுங்கப் போவது கிடையாது என்பது வரவர நிரூபிக்கப்படுகிறது. ஜே.வி.பி.யே எல்லாவற்றையும் செய்கிறது என்றார்.
![]()