பலதும் பத்தும்

ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளின் ஏற்றுமதி தடையை

ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளின் ஏற்றுமதி தடையை கனடிய அரசு இடைநிறுத்தியுள்ளது.

வரிகள் மற்றும் விநியோகச் சங்கிலி பிரச்சினைகள் “உள்நாட்டுப் பொருளாதாரத்தில் கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன” என்று காரணம் கூறப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் சனிக்கிழமை தொடங்கப்பட்ட 70 நாள் ஆலோசனைக் காலத்தில், ஏற்றுமதி தடையை முன்னெடுக்காமல் இருப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட உள்ளது.

ஏற்றுமதி தடையால் எதிர்பார்க்கப்படும் சுற்றுச்சூழல் நன்மைகள், பொருளாதார தாக்கத்திற்கு ஈடாகாதவை என்று அரசு தெரிவித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 2023ஆம் ஆண்டு ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளின் ஏற்றுமதியால் பிளாஸ்டிக் துறை 35 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.

பல உற்பத்தியாளர்கள் காகிதம், இழை மற்றும் உரம் ஆகும் மாற்றுப் பொருட்களுக்கு மாறியுள்ள போதிலும், “கணிசமான எண்ணிக்கையிலான” உற்பத்தியாளர்கள் இன்னும் மாற்றம் செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துறையில் பெரும்பாலானவை சிறு வணிகங்கள் என்பதால், ஏற்றுமதி தடையை நீக்குவது உற்பத்தி வரிசைகள் மூடப்படுவதால் ஏற்படும் இழப்புகளையும், தேங்கிய உற்பத்தி சொத்துக்களையும் குறைக்கும் என்று அரசு கூறுகிறது.

ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் வணிகங்கள், பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன அல்லது செய்யப்படும் என்பதைக் காட்டும் பதிவுகளை ஐந்து ஆண்டுகளுக்கு வைத்திருக்க வேண்டும்.

உள்நாட்டில் ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளான மளிகைப் பைகள், ஸ்ட்ராக்கள், கத்திகள் மற்றும் கேன் வளையங்கள் போன்றவற்றுக்கான தடை தொடர்ந்து அமலில் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button