கவிதைகள்

முள்ளைக் கல்லை மலரச் செய்வோம்!… கவிதை… ஜெயராமசர்மா

முள்ளும் மலரும் உள்ளம் விரிந்தால்
கல்லும் கரையும் கருணை நிறைந்தால்
கள்ளம் அகன்றால் கசடு களைந்தால்
மெள்ள மெள்ள வெளிச்சம் தெரியும்

சொல்லச் சொல்ல உள்ளம் பதியும்
மெள்ள மெள்ள உள்ளே நுழையும்
வாக்கும் போக்கும் மாற முனையும்
வழியில் தடைகள் விலகி நிற்கும்

அரக்க எண்ணம் அகல எண்ணும்
இரக்கம் அங்கே எட்டிப் பார்க்கும்
தருக்கம் உள்ளே சன்னதம் ஆடும்
முள்ளும் மலர முயற்சி நடக்கும்

கள்ளக் குணங்கள் கலங்கி நிற்கும்
உள்ளம் ஓங்கி அடிக்க முனையும்
நல்ல எண்ணம் உள்ளே நுழையும்
முள்ளும் கூட மலர எண்ணும்

தள்ளும் அனைத்தும் தள்ளி நின்றால்
முள்ளும் கல்லும் மெல்ல மலரும்
நல்ல வாழ்வை வாழ எண்ணில்
முள்ளைக் கல்லை மலரச் செய்வோம் !

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *