மிக நீண்டகாலமாகப் போராடியும் நீதியை பெறாமலேயே பலர் தொடர்ந்தும் இறக்கின்றனர்; பிரித்தானிய பிரதிநிதி கவலை

திருகோணமலை நகரில் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களுக்கு நீதிகோரி மிக நீண்டகாலமாகப் போராடி வந்த, படுகொலையான மாணவரான ரஜிகரின் தந்தையார் மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரனின் இழப்பை சுட்டிக்காட்டி ,அவரை போன்று காணாமல் போன உறவுகளை தேடியலைந்து கொண்டிருக்கும் பலர் மரணத்தை தழுவியிருக்கிறார்கள் .இவர்கள் அனைவருமே நீதியை பெறாமலே மரணமாகியிருப்பதாக பிரித்தானிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் நேற்று திங்கட்கிழமை புதிய பிரேரணை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பிரேரணை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே பிரித்தானிய பிரதிநிதி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்,இலங்கையில் இன்றும் மனித புதைகுழிகள் தோண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.இனப்பிரச்சினை என்பது இன்றும் இலங்கையில் தொடர்ந்தவண்ணமே உள்ளது.ஆகவே இலங்கை தொடர்பான இந்த பிரேரணையை வாக்கெடுப்பின்றியே நிறைவேற்றவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து பல நாடுகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.
தென்கொரியா;
பிரித்தானியாவின் தலைமையில் கொண்டுவரப்பட்டிருக்கும் குறித்த தீர்மானம் சிறந்ததொரு தீர்மானம்.ஆகவே இந்த தீர்மானத்தை வாக்கெடுப்பின்றியே நிறைவேற்றவேண்டுமென கேட்டுக்கொண்டது.
ஜப்பான்;
வாக்கெடுப்பு நடத்தாமல் நிறைவேற்றவேண்டுமென கேட்டுக்கொண்டது.
குவைத்;
வளைகுடா ஒத்துழைப்பு நாடுகள் சார்பில் பேசிய குவைத் நாட்டின் பிரதிநிதி இலங்கைக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென கேட்டுக்கொண்டதுடன்,தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆட்சேபனையும் வெளியிட்டிருந்தது.
சைப்ரஸ்;
இலங்கை தொடர்பாக பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்த அதேவேளை,எனவே குறித்த பிரேரணையை வாக்கெடுப்பின்றியே நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டது.
கோஸ்ராறிக்கா;
இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த தீர்மானம் வரவேற்கத்தக்கது.ஆகவே இந்த தீர்மானத்துக்கு எங்களுடைய பூரண ஆதரவிருக்கும் என அறிவித்தது.
கியூபா;
இலங்கைக்கு எதிரான தீர்மானம் தேவையற்ற ஒன்று.இந்த தீர்மானத்தில் கொண்டுவரப்படும் செயற்பாடுகளுக்காக செலவழிக்கப்படும் நிதி தேவையற்ற-பிரயோசனமற்றது.ஆகவே குறித்த தீர்மானத்துக்கு எதிராகவே நாங்கள் வாக்களிப்போம்.
சீனா;
சீனா வழமைபோன்று இலங்கைக்கு ஆதரவாகவே பேசியிருந்தது.மேற்படி பிரேரணையை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோமென்று அழுத்திக் கூறியது.
![]()