வீரதுர்க்கை துதி விஜய தசமி வெற்றியின் நாளே!…. கவிதை… ஜெயராமசர்மா

வீரமும் விவேகமும் வித்தையும் இணையும்
தாரக மந்திரம் சக்தியே ஆகும்
வளமும் தருவாள் வாழ்வும் தருவாள்
மண்ணும் விண்ணும் நிறைவாள் சக்தி
ஒன்பது நாளும் ஒவ்வொரு படியாய்
உயர்ந்திடும் ராத்திரி நவராத் திரியாகும்
பத்தாம் நாளில் பக்குவம் பெறுவோம்
அத்தினம் சக்தியின் ஆற்றலாய் எழுந்திடும்
வெற்றி என்பது சக்தியே ஆகும்
வீரமும் சக்தியே ஈரமும் சக்தியே
செல்வம் கல்வி அனைத்தும் சக்தியே
அனைத்தும் அமைந்தால் வெற்றியின் விஜயமே
ஆணவம் இருந்தால் அனைத்தும் அழியும்
ஆணவம் என்பதை அழிப்பவள் சக்தியே
ஆணவ அரக்கனை அழித்திடு நாளாய்
அமைவதே விஜய தசமியின் தத்துவம்
செல்வமும் கல்வியும் வீரமும் நிறைந்தால்
உள்ளே ஆணவம் உருவாகத் தொடங்கும்
ஆணவம் எழுந்தால் அழிவே நிச்சயம்
அதுவே விஜய தசமியின் தத்துவம்
சக்தியால் கிடைக்கும் சக்திகள் யாவும்
சரியான வழியில் பயன்பட வேண்டும்
மற்றவர் அழிவை மனமதில் கொண்டால்
சக்தியால் தண்டனை கிடைத்தே தீரும்
ஒன்பது நாளும் உயர்வுடை நாளே
உள்ளம் உருகி வழிபடல் வேண்டும்
பக்தியின் மயமாய் சக்தியைப் போற்றினால்
வெற்றிகள் நிச்சயம் சக்தியே கொடுப்பாள்
உள்ளம் உருகினால் உவப்பாள் சக்தி
கள்ளம் நிறைந்தால் கடிவாள் சக்தி
அள்ளி அணைக்கும் சக்தியின் நாளே
வெற்றியாம் விஜய தசமியே ஆகும்

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()
உள்ளம் உருகி வழிபடல் வேண்டும்
பக்தியின் மயமாய் சக்தியைப் போற்றினால்
வெற்றிகள் நிச்சயம் சக்தியே கொடுப்பாள்!
அருமையான வரிகள்!!