அரசின் தவறைக் கூறினால் கொலை மிரட்டல் வருகிறது; வீடுகளுக்கு அருகில் இலக்கத் தகடு இல்லாத மோட்டார் சைக்கிள்களில் பலர் வருகின்றனர்

நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடு மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாசாரம் தொடர்ந்தும் வியாபித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், அரசாங்கத்தை நேர்மறையாக விமர்சிக்கும் தரப்பினரைக் கூட அச்சுறுத்தும் திட்டமொன்று சூட்சுமமா முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ‘பை தக்சலாவா’ என்ற யூடியூப் சனலை நடத்தும் இராஜ் வீரரத்ன மற்றும் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வீடுகளுக்கு அருகில் இலக்கத் தகடு இல்லாத மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு நபர்கள் வந்த சம்பவம் இதற்கு கிட்டிய சம்பவமாக காணப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், சிவில் குடிமக்கள், ஊடகத் துறையில் உள்ளவர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாதுகாப்பின்மை உணர்வு நிலவுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,
தற்போதைய ஆளும் தரப்பினர் கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது மேசைகள் மற்றும் நாற்காலிகளைக் கொண்டு வாருங்கள், தேசிய பாதுகாப்பு குறித்த டியுசன் வகுப்புகளை எடுக்கிறோம் என பிரஸ்தாபித்திருந்தனர். அப்போது அவ்வாறு சொன்ன இந்த அரசியல் கட்சி நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்தக் கொலைக் கலாச்சாரம் நகரம் நகரமாக வியாபித்து வருகின்றன. சமூக ஊடக ஆர்வலர்களுக்கு எதிரான இத்தகைய அச்சுறுத்தல்கள், நாட்டின் அரசியலமைப்பின் உச்ச சட்டமான மனித வாழ்வுரிமையை மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றது .
யூடியூப் சனலை நடத்துவோருக்கு எதிரான இந்த அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்தின் மீது விழுந்த பெரும் அடியாகும். இதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இராஜ் வீரரத்ன மற்றும் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வீடுகளுக்கு அருகில் வருகை தந்த, இந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசாங்கம் செய்யும் நல்ல விடயங்களைப் பாராட்டவும், தவறான விடயங்களை விமர்சிக்கவும் சகல குடிமக்களுக்கும் உரிமை காணப்படுகின்றது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் எது சரி எது தவறு என்பதை சுட்டிக்காட்டுவது 220 இலட்சம் மக்களினதும் பொறுப்பாகும். இந்த உரிமை மக்களுக்குச் சொந்தமான உரிமை ஆனபடியால், அரசாங்கத்திற்கோ அல்லது குண்டர்களுக்கோ இதனை பறிக்க முடியாது.
சமூகத்தை அச்சுறுத்தி வரும் இந்தக் கொலைக் கலாசாரத்தை முறியடிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக எங்களால் பெற்றுத் தர முடியுமான அதிகபட்ச பக்க பலத்தை பெற்றுத் தருவோம். அரசாங்கத்தால் செவிமெடுக்க முடியாத விடயங்கள் யூடியூப் அலைவரிசைகளில் செல்லப்படும் போது, அவ்வாறு விடங்களை முன்வைப்பவர்களை அச்சுறுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் தவறுகளை சரிசெய்து கொண்டு, நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பணியையே முன்னெடுக்க வேண்டும். சமூக ஊடகங்களிலும் சுதந்திர ஊடகங்களிலும் உண்மையைப் பேசுவோரை பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி என்றும் முன்நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
![]()