செம்மணி புதைகுழியை பார்வையிட ஜனாதிபதிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கும்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை பார்வையிடுவதாக இருந்தால் அதற்கான அனுமதியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கும் என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் 39வது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்டது.
அகழ்வுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அனுரகுமார, திங்கட்கிழமை யாழ்.வரும் போது செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடுவது பற்றி, அமைச்சர் சந்திரசேகர் கூறியதாக பத்திரிகை வாயிலாக நாங்கள் பார்த்தோம். ஜனாதிபதி அனுரகுமார மனிதப் புதைகுழியை பார்வையிடுவது தொடர்பில் இதுவரை நீதிமன்றுக்கு எந்தவித நகர்த்தல் பத்திரமும் தாக்கல் செய்யப்படவில்லை. நாளை (இன்று) தாக்கல் செய்யப்படுமாக இருந்தால் நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கும் என்றார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க விஜயம் செய்யும் போது செம்மணி மனித புதைகுழியை ஜனாதிபதி பார்வையிடும் வாய்ப்பு உள்ளதாக என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அண்மையில் தெரிவித்திருந்ததும் தெரிந்ததே.
![]()