இலங்கை

பயங்கரவாத சட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நஷ்ட ஈட்டினை அரசாங்கம் வழங்க வேண்டும்!

பயங்கரவாத (PTA) தடுப்புச் சட்டம் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் அனைவருக்கும் நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ( N.F.G.G) கட்சியின் மாவட்டப் பிரதிஅமைப்பாளரும் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினருமான அப்துல் ஹசன் மொஹம்மது பஷீர் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நடை பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அவர் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடுப்புச் சட்டமானது இலங்கையில் அவசரமாக நீக்கப்பட வேண்டும். அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இச்சட்டத்தை நீக்குவதாக கூறியது.

ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னரும் அச்சட்டத்தை இன்னும் நீக்கவில்லை.இது சிறுபான்மை சமூகத்தினருக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சட்டம் 1978 ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாகவும், 1979 ஆம் ஆண்டு நிரந்தரச் சட்டமாகவும் ஆக்கப்பட்டது.

இச்சட்டத்தினை உள்ளூர் மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற கருத்தினை மிக வலுவாக வலியுறுத்தி வருகின்றார்கள்.

ஏன், தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் குறித்த சட்டத்தினை இல்லாமல் செய்ய வேண்டும் இது நாட்டிற்கு ஆபத்தானது என்ற கருத்தினை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, இவர்கள் சொல்வதைப் போன்று இந்த சட்டத்தை அரசாங்கம் இல்லாமல் செய்ய வேண்டும்

குறித்த சட்டமானது தமிழ் பேசுகின்ற இனத்திற்கு எதிராக மிக கடுமையாக பிரயோ கிக்கப்பட்டிருப்பதையும் , அதன் மூலம் சொல்லெனாத் துயரங்களை நம் மக்களில் சிலர் அனுபவித்திருப்பதையும் நாங்கள் பார்க்கின்றோம்.

அண்மையில் கூட இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் குறிப்பாக ருஷ்டி மற்றும் மாவனல்லையை சேர்ந்த சுஹைல் என்னும் சகோதரர்கள் இச்சட்டத்தின் மூலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எனவே,குறித்த சட்டமானது 90 நாட்கள் நீதிமன்றத்தின் விசாரணையோ, அழைப்பானையோ இன்றி கைது செய்து அடைத்து வைத்து தண்டனை வழங்குவது என்ற விடயங்களுக்கு வழிசமைக்கின்றது.காலத்தை நீடித்தும் தண்டனை வழங்க கூடியதாகவும் இருக்கின்றது.

இது மிக தெட்டத் தெளிவான மனித உரிமை மீறலான செயலாக காணப்படுவதை மனித உரிமை சம்பந்தமாக அறிவுள்ள அனைவரும் புரிந்து கொள்வார்கள் விளங்கிக் கொள்வார்கள்.

இந்த சட்டம் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்ற சட்டமாகக் காணப்படுகிறது.எனவே இச்சட்டத்தை இந்த நாட்டிலிருந்து அரசாங்கம் சொல்வதைப் போன்று உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும்.

அத்துடன் இச் சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் பேசுகின்ற அனைவருக்கும் நஷ்ட ஈட்டினை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *