தேவையற்ற இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக வட,கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தேவையற்ற இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக இன்று திங்கட்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தால் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த ஹர்த்தால் போராட்டத்திற்கான அழைப்பை இலங்கை தமிழ் அரசுக் கட்சி விடுத்துள்ள நிலையில் பலரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்ததனால் இன்று வடக்கு,கிழக்கு மாகாணங்கள் முடங்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டுப் பகுதியில் கடந்த 7ஆம் திகதி
இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேவையற்ற இராணுவ பிரசன்னத்துக்கு எதிராகவுமே ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஹர்த்தால் தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் ஆதரவையோ எதிர்ப்பையோ வெளிப்படுத்தாமல் மௌனமாக இருக்கும் நிலையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஹர்த்தாலுக்கு தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளன.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், மற்றும் பொது அமைப்புகள் பலவும் இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.
![]()