இலங்கை

செம்மணி அவலத்தின் சூத்திரதாரிகளான படையினர் நாட்டை விட்டுத் தப்பியோடலாம் – தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றிடம் சுமந்திரன் கோரிக்கை!

செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி   யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைகளின்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றை தமது சமர்ப்பணத்தில் கோரினார்.

1990 களின் கடைசி வரையான காலத்தில் இந்தப் பிரதேசத்தில் காணாமல்போன ஆள்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நான்கு பேர் கொண்ட ஆணையம் ஒன்றை நியமித்து விசாரணை செய்தது.

தேவநேசன் நேசையா தலைமையிலான இந்தக் குழுவில் கே.எச்.கமிலஸ் பெர்னாண்டோ, ஜெஸிமா இஸ்மாயில், சி.எம்.இக்பால் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

அந்த ஆணைக்குழு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது.

அந்தச் சமயத்தில் காணாமல்போன 300 பேர் வரையானோர் குறித்து அந்த ஆணைக்குழு விசாரணை நடத்தி இருக்கின்றது. அவர்களில் 200 பேர் வரை இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்ட அந்த விசாரணை ஆணைக்குழு அதில் சம்பந்தப்பட்ட பல படையினரின் பெயர் விவரங்களையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

என்று தெரிவித்த சுமந்திரன் சுமார், 210 பக்கம் கொண்ட அந்த ஆணைக்குழு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையின்படி, காணாமல்போனோரின் பெரும்பாலானோர் இந்த செம்மணிப் பிரதேசத்தை நெருக்கமான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்ல அவ்வாறானோரில் பெரும்பாலானோரின் கதி செம்மணித் தரவையில் முடிவுற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அந்த அறிக்கை கொண்டிருந்தது.

அவற்றை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்த சுமந்திரன், அந்த அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இந்த எலுப்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, விசாரணை மும்முரமடையும்போது நாட்டை விட்டுத் தப்பி ஓடி தலைமறைவாகக் கூடிய வாய்ப்பு உண்டு.

அது குறித்து முற்கூட்டியே நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுமந்திரன் நீதிமன்றத்தைக் கோரினார்.

அந்த ஆணைக்குழு அறிக்கையின் பிரதியைப் பெற்றுக்கொண்ட நீதிவான் இந்த விடயம் குறித்து புலனாய்வு செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினரைப் பணித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *