இலங்கை

ஜனாதிபதி லஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாக சுமந்திரன் குற்றச்சாட்டு

தேர்தலுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அண்மைய அறிக்கை தொடர்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கவலை வெளியிட்டுள்ளார்.

எக்ஸ் தளத்திலேயே அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

”தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தின் கீழ் வராத உள்ளுராட்சி மன்றங்களின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது என்ற ஜனாதிபதியின் கருத்து வாக்காளர்களுக்கு மீண்டும் மீண்டும் லஞ்சம் வழங்குவது போன்று. இது தேர்தல் குற்றமாகும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கமைய சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான சரியான நிலைமைகளை உருவாக்குவதை உறுதி செய்வதே ஜனாதிபதியின் செயற்பாடுகளில் ஒன்று” என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தியின் கீழ் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதியை உடனடியாக அங்கீகரிக்க முடியும் என்று கூறினார்.

இருப்பினும், ஏனைய கட்சிகளால் நடத்தப்படும் சபைகளுக்கும் இதனைச் செய்ய முடியாது, ஏனெனில் அவை கடந்த காலங்களில் ஊழல் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. முழுமையான பரிசீலனை தேவை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்த கருத்தைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கவலை வெளியிட்டுள்ளன.மேலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு வாக்காளர்கள் மீது மறைமுக அழுத்தம் பிரயோகிக்கும் செயற்பாடாகும் என்று பெப்ரல் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *