இலங்கை

தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு சிறிலங்காவின் அரசகட்டமைப்புக்குள் தீர்வில்லை

தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு சிறிலங்காவின் அரசகட்டமைப்புக்குள் தீர்வைக் காண்பது என்று எதிர்பார்ப்பது அர்த்தம் அற்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இன அழிப்பு சிறிலங்கா ராணுவத்துக்கும், இந்திய இராணுவத்திற்குமான  புரிந்துணர்வு உலகெங்கும்வாழும் தமிழர்களை வேதனைக்குள்ளாக்குகின்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிறிலங்கா பயணம் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பின்வரும் கருத்துகளை பதிவு செய்யவிரும்புகிறது.

1. சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கா தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இந்திய பிரதமரின் முதலாவது பயணமாக இந்தப் பயணம் அமைந்திருந்தது. இந்தபயணத்தில். சிறிலங்கா, இந்தியா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான சில புரிந்துணர்வு உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

2. சம்பூர் பகுதியில்.அனல்மின் நிலையத்தினை அமைப்பது தொடர்பான உடன்பாடும் கைச்சாத்திடப்பட்டு இருக்கின்றது.

நாம் இவ்விடத்தில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டும் அவசியம் இருக்கிறது. இலங்கைத்தீவில். தமிழ்த் தேசிய இனத்தின், தமிழர் தேசத்தின் தாயகமாக வடக்கு கிழக்கு பகுதிகள் அமைந்திருக்கின்றன .வடக்கு, கிழக்குப் பகுதிகள் தமிழர் தாயகம் என்பது இலங்கை இந்திய ஒப்பந்தத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒருவிடயமாகும். இந்த நிலையில், தமிழர் தாயகத்திலும் அதை அண்டிய கடலிலும் இருக்கின்ற வளங்கள், அவை இயற்கை வளம், மனித வளம் என எந்த வளங்களாக இருந்தாலும் அந்த வளங்கள் பயன்படுத்தப்படும் போது, ஏனைய அரசுகளுடன், நாடுகளுடன் பங்கிடப்படும்போது தமிழ் மக்களுடைய, தமிழர் தேசத்தினுடைய சம்மதம் பெறப்படுதல் மிகவும் முக்கியமானதாக இருக்கவேண்டும் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தமிழர் தேசத்துடன், தமிழ் மக்களுடன் கலந்து பேசாத, அவர்களுடைய சம்மதத்தைப் பெறாது மேற்கொள்ளப்படுகின்ற எந்த உடன்பாடுகளும், தமிழ்மக்களின் அங்கீகாரத்தினை பெறாதவை  என்கின்ற அடிப்படையில் தமிழ் மக்களுடைய இறைமைக்கும்,  தமிழ் மக்களுடைய தாயகத்துக்கும் அவை உடன்பாடில்லாத விடயங்களாக இருக்கின்றன என்பதனையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது .

இந்திய அரசு சிறிலங்கா அரசுடன். உடன்பாடுகளை செய்து கொண்டு தனக்கு தேவையான நலன்களை அடைந்து கொள்ளும் ஓர் அணுகுமுறையை எடுத்துவருகிறது. இதனால். இவ்விடத்தில் நாம் சுட்டிக்காட்டும் விடயம் மிகவும் முக்கியமானது; அடிப்படையானது என்பதை புரிந்து கொள்ளுமாறு இந்திய பிரதமரையும் இந்திய கொள்கை வகுப்பாளர்களையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ் மக்களுடைய தாயகத்திலும் அதை அண்டிய கடலிலும் இருக்கின்ற எந்த ஒரு விடயத்தையும் எந்த வளங்களையும் தமிழ் மக்களுடைய சம்மதத்துடன் பெறவேண்டும் என்கின்ற ஒரு நிலைப்பாட்டை அனைத்து நாடுகளும் எடுக்க வேண்டும் என்பதும் எமது கோரிக்கையாகும்.

3. சிறிலங்கா ராணுவத்துக்கும், இந்தியஇராணுவத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாடும் இதில் முக்கியமான ஒன்றாக அமைந்தது.

சிறிலங்கா இராணுவத்தின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளும், மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களும் உலகம் அறிந்தவை. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் படையில் சிறிலங்கா ராணுவத்தினை இணைத்துக்கொள்ளக்கூடாது என்ற கண்டனங்கள் அனைத்துலக சிவில் சமூக அமைப்புகளால் எழுப்பப்பட்டு வருவதையும் நாம் அவதானித்திருக்கின்றோம்.

ஈழத்தில், தமிழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழினஅழிப்பினை ஈழம், தமிழ் நாடு, உலகம் அனைத்தும் வாழ்கின்ற தமிழ்மக்கள் முழுமையாக அறிந்திருக்கிறார்கள். அந்த இன அழிப்பு தந்த வேதனையின் வடுக்கள் தமிழ் மக்களின் மனங்களில் நிலைத்து இருக்கின்றன. இத்தகைய ஒரு சூழலில், சிறிலங்கா இராணுவமும் இந்திய ராணுவமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டமை உலகமெங்கும் வாழ்கின்ற தமிழ்மக்களை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றது என்பதனை இந்திய பிரதமருக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

4. மேலும். இந்தியப் பிரதமர் சிறிலங்காவின் யாப்பினை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். நேரடியாகக் குறிப்பிடப்படாவிட்டாலும் சிறிலங்காவின் யாப்பில் தற்போது இருக்கின்ற 13 ஆவது  திருத்தச் சட்டத்தினை சிறிலங்கா அமுல்படுத்தவேண்டும் என்கின்ற அர்த்தத்தினை இந்தக் கூற்றின் ஊடாக இந்திய பிரதமர் வெளிப்படுத்தியிருக்கலாம் என்பது எமது ஓர் அவதானிப்பாகும்.

வரலாறு சொல்லுகின்ற உண்மைகளை புறம்தள்ளிவிட்டு அரசியலை நாம் மதிப்பீடு செய்ய முடியாது.இலங்கைத்தீவில், சிறிலங்கா அரசு ஒரு சிங்கள மேலாதிக்க, இனவாத அரசாக இருக்கின்ற ஒருநிலையும், இலங்கையின் ஜனநாயகம் என்பது, இனநாயகமாக இயங்குகின்ற நிலையும் உலகம் அறிந்ததொன்று.  பல உலக அறிஞர்கள் இதனைச்சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

இதனால் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினையை தீர்வு காண்பதற்குரிய ஒரு அரசியல் சமூகமோ (polity), தீர்வு காண்பதற்குரிய ஒரு அரசியல் விருப்போ தென்னிலங்கையில் இருப்பதாக வரலாறு நமக்கு காட்டவில்லை. தற்போதைய நிலையும் அவ்வாறுதான் இருக்கின்றது. தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை என ஒன்று இருப்பதைக்கூட இதுவரை அங்கீகரிக்கவில்லை. இப்படியான ஒருசூழலில், தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு சிறிலங்காவின் அரசகட்டமைப்புக்குள் தீர்வைக் காண்பது என்று எதிர்பார்ப்பது அர்த்தம் அற்றது. இந் நிலையில் இந்தியஅரசு சிறிலங்கா அரசிடம் வேண்டுகோள் விடுப்பது எந்தவிதமான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை.

இந்த விடயங்களை நாம் சுட்டிக் காட்டுகின்ற அதேவேளை தமிழ் மக்களுடைய தேசிய இனஉரிமைகளை தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், ஒருதேசம் என்பதனையும் தமிழ் மக்களுக்கு வடகிழக்கும் அதை அண்டிய கடலும்  பாரம்பரியமாக தாயகமாக உள்ளது என்பதனையும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரித்து அதன் அடிப்படையில் இந்திய – ஈழ உறவைக் கட்டியெழுப்ப இந்திய அரசு முன்வரவேண்டும் என நாம் வேண்டுகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.