உலகம்

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு- மக்கள் அச்சம்

மியான்மரில், கடந்த மாதம் 29-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் மியான்மர் உருக்குலைந்தது.

தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. பாலங்கள், அணைகள் இடிந்து விழுந்தன.

சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,700ஐ கடந்தது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னமும் முழுமையாக மீளாத நிலையில், இன்று காலை 7.54 மணிக்கு மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டது. உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *