சம்பந்தன், மாவைக்கு பிரதமர் மோடி அனுதாபம்; தமிழ்த் தலைவர்களுக்கும் அறிவுரை

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான மறைந்த இராஜவரோதயம் சம்பந்தன், மாவை.சோ.சேனாதிராஜா ஆகியோருக்கு இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன், அவரைச் சந்தித்த வடக்கு,கிழக்கு தமிழ்த் தலைவர்களுக்கு அறிவுரையொன்றையும் வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப்பிரதமர் நரேந்திரமோடிக்கும் வட,கிழக்கு தமிழ்த் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பு தாஜ் சமுத்தரா ஹோட்டலில் நடைபெற்றது.
இதன்போது, தமிழ்த் தலைவர்களை சந்தித்தவுடனேயே, பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா மறைவையிட்டு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். அவர்களின் மறைவின் பின்னர் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவர்கள் இருக்கின்றபோது நீங்கள் அனைவரும் ஒன்றாக வருவீர்கள். தற்போது வேறுவேறு அரசியல் தரப்புக்களாக ஒன்றாக வந்திருக்கின்றீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த தமிழ்த் தலைவர்களை சந்தித்ததன் பின்னர் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், ‘இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.
பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான இரா.சம்பந்தன் மற்றும் மாவை.சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள். அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
எனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.