உலகம்

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி இருந்தது? – சுனிதா சுவாரஸ்ய பதில்

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு சுனிதா வில்லியம்ஸ் அளித்த சுவாரஸ்ய பதில் கவனம் பெற்றுள்ளது.

விண்வெளியில் அதிக நாட்களை கழித்த 2-வது அமெரிக்க வீரர் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். சுனிதா வில்லியம்ஸும் பேரி வில்மோரும் விண்வெளியில் 286 நாட்களை கழித்துள்ளனர். அங்கு 12,13,47,491 மைல் தூரம் பயணித்துள்ளனர். 4,576 முறை பூமியை சுற்றி வந்துள்ளனர். சுனிதா 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார். இதன்மூலம் அதிக நேரம் நடந்த முதல் பெண் என்ற சாதனை படைத்துள்ளார். ஒட்டு மொத்தமாக அதிக நேரம் விண்வெளியில் நடந்தவர்கள் பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளார்.

இப்படி நாசாவுக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள சுனிதா வில்லியம்ஸ் முதன்முறையாக சக வீரர் வில்மோருடன் இணைந்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: விண்வெளியில் இருந்து இந்தியாவைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு முறை நாங்கள் இமயமலை மேலே பயணித்தபோதும் புட்ச் வில்மோர் சில அற்புதமான புகைப்படங்களை எடுத்தார்.

இமயமலை இந்தியாவுக்குள் வழிந்தோடுவதுபோல் ஒரு வியத்தகு காட்சியைத் தந்தது. இந்தியாவை விண்வெளியில் இருந்து பார்க்கும் போது மும்பையில் இருந்து குஜராத் வரை இரவில் ஒளிர்ந்த மின் விளக்குகள் பிரம்மாண்டமாகக் காட்சியளித்தன.

ஒரு நாள் நான் எனது தந்தையின் சொந்த நாட்டுக்கு வர விரும்புகிறேன். இந்தியா ஒரு சிறந்த நாடு. அற்புதமான ஜனநாயகம்.

ஆக்சியம் மிஷனுடன் இணைந்து விண்வெளிக்குச் செல்லவிருக்கும் இந்திய வீரரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியா தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சி பாராட்டத்தக்கது. எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறேன். இவ்வாறு சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.