மோடிக்கு அழுத்தம் கொடுப்பது முக்கியமானது

இலங்கைக்கு வருகைதரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வடக்கு மீனவர்களின் விவகாரம் குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். ஈச்சமோட்டை ஸ்ரீ ஞானவைரவர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சனைகளில் இழுவைமடிப் படகுகள் ஊடாக இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதும் ஒன்று. வடமாகாண தமிழ் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது.
எனவே கட்டாயமாக இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இது தொடர்பாக பேச வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை. இது தொடர்பாக நான் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளேன் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, கச்சத்தீவு மீண்டும் இந்தியாவுக்கு வழங்குவதற்கு மோடி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறித்தும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்தார்.
அதன்படி, இது ஒரு அரசியல் ரீதியான ஓர் தீர்மானமே. இது நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒரு விடயம் என அவர் குறிப்பிட்டார்.