கைதான அருண் தம்பிமுத்து பிணையில் விடுவிப்பு

மட்டக்களப்பில் சிஜடி நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவை 3 கோடியே 28 இலச்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வியாழக்கிழமை (3) பிணையில் விடுவித்துள்ளார்.
மட்டக்களப்பை சேர்ந்த கனடாவிலுள்ள ஒருவருடன் இணைந்து இருவரும் வர்த்தக நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்ட நிலையில் அந்த வர்த்தகத்திற்கு அவரிடமிருந்து இருந்து 3 கோடியே 70 இலட்சம் ரூபா பணத்தை பெற்று அதற்கான வர்த்தக நடவடிக்கை இடம்பெறாமல் நிதியை மோசடி செய்தார் என கனடாவிலுள்ளவர் கொழும்பிலுள்ள சிஜடி நிதி மோசடி பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த முறைப்பாட்டுக்கு அமைய தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் பாசிக்குடாவில் ஹோட்டலில் இருந்த நிலையில் அவரை கொழும்பில் இருந்த வந்த சிஜடி நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்தனர்.
அவரை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றின் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அருண் தம்பிமுத்து சார்பாக ஆஜராகிய கமேகே தலைமையிலான சட்டத்தரணிகள் இது ஒரு சிவில் வழக்கு. வர்த்தம் தொடர்பானது. இதனை நிதி மோசடி என சோடிக்கப்பட்டு முறைப்பாடு செய்துள்ளதாக வாதங்களை முன்வைத்த நிலையில் நீதவான் அவரை 3 கோடியே 28 இலட்சம் ரூபா பெறமதியான இரண்டு பேர் கொண்ட சரீரப் பிணையில் விடுவித்து எதிர்வரும் மே மாதம் 8 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.