மோடியை இலங்கையில் இருந்து அழைத்துச் செல்ல 4 ஹெலிகள் தயார்

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து பிரதமர் மோடியை அழைத்து வருவதற்காக இந்திய விமானப் படையின் 4 ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தையும் மண்டபத்தையும் இணைக்கும் வகையில் புதிய ரயில் மேம்பாலம் ரூ.545 கோடியில் கட்டப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா எதிர்வரும் 6-ந் திகதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்று புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
முன்னதாக ஏப்ரல் 4, 5 ஆம் திகதிகளில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் மோடி அங்கிருந்து 6-ந் திகதி ஹெலிகொப்டர் மூலம் நேரடியாக மண்டபத்தில் வந்து இறங்குகிறார். அதனை தொடர்ந்து திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
இலங்கையில் இருந்து பிரதமர் மோடியை அழைத்து வருவதற்காக கோவை மாவட்டம் சூலூரில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்திற்கு சொந்தமான எம்.ஐ. -17 ரக ஹெலிகொப்டர்கள் செல்ல உள்ளன. இதற்காக நேற்று முன்தினம் உச்சிப்புளிக்கு வந்த 4 எம். ஐ.-17 ஹெலிகொப்டர்கள் இங்கிருந்து இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குச் சென்றுள்ளன.திறப்பு விழா நடைபெறும் 6-ந் திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து அநுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு செல்லும். அங்கு காலை 10.40 மணிக்கு பிரதமர் மோடியை அழைத்துக் கொண்டு 11.40 மணிக்கு மண்டபம் முகாமில் வந்து இறங்கும்.
இவற்றில் மூன்று ஹெலிகொப்டர்கள் மண்டபத்திற்கும், ஒரு ஹெலிகொப்டர் உச்சிப்புளி கடற்படை தளத்திற்கும் செலவுள்ளன. இதன் ஏற்பாடுகளை பிரதமரின் விசேட பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.