இலங்கை

பிரிட்டனுக்கான விஜிதவின் பதிலை அமெரிக்கத் தூதுவர் மாற்றியமைத்தாரா?; சந்தேகம் எழுப்பும் கம்மன்பில

இலங்கையின் இராணுவப் பிரதானிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் பிரித்தானியாவுக்கு பதிலளிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எழுதிய அறிக்கையை அமெரிக்கத் தூதுவர் ஜுலிசங் மாற்றியமைத்தாரா? என்ற சந்தேகங்கள் எழுவதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துறு ஹெல உறுமய தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

எமது இராணுவத்தினருக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் காலம் தாழ்த்திக்கொண்டிருந்த அரசாங்கத்தின் சார்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்துள்ளார். ஆனால் அதுவொரு எவ்வித பிரயோசனமும் அற்ற புடலங்காய் பதிலாகும். பிரித்தானியா ஒருதலைப்பட்சமாக தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அதனை புதிதாக கூற வேண்டியவில்லை. ஆனால் அந்த நடவடிக்கை இலங்கையின் நல்லிணக்கத்திற்கு சிக்கலானது என்று அவர் கூறியுள்ளது உண்மையானது.

எவ்வாறாயினும் அரசாங்கத்திடமிருந்து நாங்கள் இதற்கும் மேலான பதிலை எதிர்பார்த்தோம். இராணுவத்தினர் போர்க்களத்திற்கு படைகளின் தளபதியின் உத்தரவுக்கமையவே சென்றுள்ளனர். இதனால் எமது இராணுவத்தினரை பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்துடையது. இது தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தேவையில்லாதது. திசைக்காட்டி அரசாங்கத்தின் நிலைப்பாடும் தேவையற்றது. ஆனால் இராணுவத்தினரை போர்க்களத்திற்கு அனுப்பிய இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் வழங்கும் பதிலையே முழு உலகமும் எதிர்பார்க்கின்றது.

பிரித்தானியா அரசாங்கம் இவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பதற்கு காரணம் என்று கண்டறிய செய்த விசாரணை என்ன? இராணுவத்தினர் நால்வரை மாத்திரம் இதற்காக தெரிவு செய்தது ஏன்? இவர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் சரியான குற்றச்சாட்டுகள் என்ன? யுத்த காலத்தில் இருந்த இராணுவத் தளபதியை விட்டுவிட்டு கடலில் போராட்டத்தில் இருந்த கடற்படை தளபதியை மாத்திரம் தெரிவு செய்தமைக்கான அடிப்படை என்ன? இது தொடர்பில் பிரித்தானியாவிடம் அரசாங்கம் கேள்வியெழுப்ப வேண்டும்.

சில்கொட் அறிக்கையில் யுத்தக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக உள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிலேயருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பிரித்தானியா அரசாங்கம் இலங்கை இராணுவத்தினர் மீது அடிப்படை காரணமின்றி இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தொடர்பில் கேள்வியெழுப்பதற்கு இந்த அரசாங்கத்திடம் முதுகெலும்பில்லை.

தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கத்தில் இருந்த தேசப்பற்றாளர் என்ற வகையில் விஜித ஹேரத் நிச்சயமாக இவ்வாறாக எழுதியிருக்கலாம். ஆனால் தற்போதைய அரசாங்கத்திற்கும் மேலாக இருந்து எமது நாட்டை ஆளும் அமெரிக்காவினால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் ஆளுநரான ஜுலிசங் அந்த அறிக்கையை அழித்து மாற்றியிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எங்களிடம் எழுகின்றன. அவ்வாறு நடந்திருந்தால் அவ்வாறு ஏன் நடந்தது என்பதனை கூற வேண்டியது அமைச்சர் விஜித ஹேரத்தின் கடமையாகும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *