அர்ச்சுனா தொடர்பில் சபாநாயகர் விரைவில் நடவடிக்கை எடுப்பார்

பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகளுக்குள் இருந்துகொண்டு இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்படுவதை தடுக்கும் வகையில் சபாநாயகர் ஏதேனும் தீர்மானத்தை எடுப்பார் என்று நம்புவதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் செயற்பாடுகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
பாராளுமன்றத்தில் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்கள் உள்ளன. அவர், சட்டத்தரணியொருவர் தொடர்பிலும் அபகீர்த்தியை ஏற்படுத்துகின்றார். அத்துடன் அவர் பாராளுமன்றம் சென்று தனது யூடியுப் சனலை பிரசாரப்படுத்த தேவையில்லாதவாறு இனவாதத்தை தூண்டுகின்றார். இது தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதா? என ஊடகவியலாளர் அமைச்சரிடம் கேள்வியெயழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் தெரிவிக்கையில்,
நேற்று (நேற்று முன்தினம்) சபை முதல்வரால் இது தொடர்பில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி சபாநாயகரின் பக்கத்தில் பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாப்பதற்கும், இதற்கும் அப்பால் இனங்களுக்கு இடையே ஒற்றுமையின்மை மற்றும் முரண்பாடுகள் ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகளுக்குள் இருந்து மேற்கொள்ளும் கருத்துக்களை தவிர்ப்பதற்காக சபாநாயகர் பக்கத்தில் ஏதேனும் தீர்மானம் எடுக்கப்படும் என்று நம்புகின்றோம் என்றார்.
![]()