இலங்கை

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று

மாத்தறை நீதவான் நீதிமன்றம் தன்னை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக் கோரி முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று (17) அறிவிக்கப்படவுள்ளது.

இந்த மனு மீதான தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

2023ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதியன்று உத்தரவிட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்தார்.

எனினும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் துறையினர் பல இடங்களை சோதனை செய்த போதிலும், அவர் அந்த இடங்களில் எங்கும் இல்லாததால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கண்டவுடன் கைது செய்ய உத்தரவிட்டு, மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த 11 ஆம் திகதி திறந்த பிடியாணையை பிறப்பித்தது.

இந்நிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடும் பணிக்காக ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று (16) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.