இலங்கை

உள்ளூராட்சி சபைகளில் களமிறங்கும் முன்னாள் எம்.பி.க்கள்

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த மற்றும் போட்டியிடாத முன்னாள் எம்.பி.க்கள் பலர் எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ச மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோர் எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடந்த தேர்தல்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து புதிய ஜனநாயக முன்னணியுடன் இணைந்து செயற்பட்ட லொஹான் ரத்வத்த தற்போது மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் அண்மையில் இணைந்து கொண்டார்.

அதன்படி, இந்த ஆண்டு நடைபெறும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட அவர் தயாராகி வருவதாகவும் இந்தத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வழிநடத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளார்.

பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், இறுதி பொதுத் தேர்தலில் ராஜபக்சக்களுக்கு எதிராக நிலவிய அலை காரணமாக தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய பிரதான கட்சிகளிலிருந்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் மூலம் தமது அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *