கிழக்கில் அடிப்படைவாதம் என்று கூறி முஸ்லிம்கள் மீது பழி சுமத்த தீயசக்திகள் முயற்சிக்கலாம்

கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீயசக்திகள் முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும். இவ்வாறான கூற்றுக்களை கொண்டு பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம்.எனவே இந்தக்கூற்றின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி நிசாம் காரியப்பர் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சின் ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் குறிப்பிட்டுள்ள விடயம் இன்று (நேற்று) தேசிய பத்திரிகைகளில் பிரதான செய்தியாக வெளிவந்துள்ளன.
குறிப்பாக ‘ கல்முனை பகுதிகளில் மத அமைப்புக்களினால் பிள்ளைகள் தீவிரவாத கற்பித்தலுக்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும் அதன் காரணமாக உளவுத்துறையினர் கண்காணிப்புக்களை அதிகரிக்க வேண்டியுள்ளது’ என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த கூற்றினால் எமது பிரதேச மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கூற்றுக்களில் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அமைப்புக்களின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப் படவில்லை.கல்முனை ஜும்மா பள்ளிவாசல், பள்ளிவாசல் சம்மேளனம், ஜம் இய்யதுல் உலமா சபை உட்பட இஸ்லாமிய அமைப்புகள் உட்பட இஸ்லாமிய மக்கள் தீவிரவாதத்துக்கு எதிராகவும், தீவிரவாதம் தொடர்பான விசாரணைகளுக்கும், தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராகவுள்ளனர்.
இவ்வாறான அடிப்படைவாத போக்குகள் உள்ள குழுக்களின் பின்னணியையும், அவர்களுக்கு யார் நிதி வழங்குகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள எமது மக்கள் ஆர்வமாக உள்ளன ர் . எனவே புலனாய்வு விசாரணைகள் சட்டத்துக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்கு முன்னரும் முஸ்லிம் சமூகம் பல விடயங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுத்தும் உரிய அதிகாரிகள் பொறுப்புடன் செயற்படாதவில்லை. இதனால் சஹ்ரானின் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன . இன்னொரு சஹ்ரானின் சம்பவம் இந்த நாட்டில் இனி ஒருபோதும் இடம் பெறக் கூடாது.
கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீய சக்திகள் முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும். அதிகாரபூர்மற்ற அறிவிப்புக்கள் வீண் அச்சம் மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையை அரசாங்கம் ஏற்படுத்தக் கூடாது. இவ்வாறான பொதுவான கூற்றுக்களினால் சமூகத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் செயல்படுகிறது என்ற பழைய தவறான அபிப்பிராயம் மீண்டும் தோற்றுவிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான கூற்றுக்களை கொண்டு பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம் .இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பதம் இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரண்பட்டது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
எனவே கிழக்கில் அடிப்படைவாதம் என்றஅமைச்சர்களின் கூற்றுக்களை தெளிவுப்படுத்தி அரசாங்கம் பொதுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
இதேவேளை நோன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இப்தார் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துகிறது. முஸ்லிம் வர்த்தகர்கள் பல கோடி பெறுமதியான விளம்பரங்களை வழங்குகிறார்கள். ஆனால் இதுவரை காலமும் இரவு வேளையில் 1 மணித்தியாலமாக ஒளிபரப்பப்பட்ட இரவு வேளைக்கான இஸ்லாமிய நிகழ்ச்சி நேற்று (நேற்று முன்தினம் ) வரை 45 நிமிடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.ஆகவே இதனை திருத்தம் செய்து கூட்டுத்தாபனம் வழமை போல் 1 மணித்தியாலத்துக்கு இஸ்லாமிய நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றார்.
![]()