இலங்கை

கச்சதீவு திருவிழாவில் இம்முறை 3,400 இந்திய பக்தர்கள் பங்கேற்பு..!

இந்திய – இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா எதிர்வரும் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இம்முறை கச்சதீவு திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள 3,464 பெயர் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற உள்ள திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருமுதல்வர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் ,இராமேஸ்வரம் பங்குத்தந்தை அசோக் வினோவுக்கு அனுப்பிய அழைப்பிதழை ஏற்று, இராமேஸ்வரத்திலிருந்து கச்சதீவு திருவிழாவுக்குச் செல்ல 79 விசைப்படகுகள் மற்றும் 23 நாட்டுப் படகுகளில்,

2,720 ஆண்கள், 652 பெண்கள், 56 ஆண் குழந்தைகளும், 36 பெண் குழந்தைகளும் என மொத்தம் 3,464 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சாராத வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் தங்கள் ஊர்க் காவல் நிலையங்களில் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.

அதுபோல மத்திய,மாநில அரசு பணியாளர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள தங்களின் அலுவலகத்தில் தடையில்லாச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

மார்ச் 14 அன்று மாலை 4 மணியளவில் கச்சதீவில் கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமாகும். தொடர்ந்து ஜெபமாலை மன்றாட்டு, இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கிவரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும், இரவு அந்தோனியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனியும் நடைபெறுகிறது.

மார்ச் 15 அன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலியும், கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெறும். இதனை தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *