உலகம்

மீண்டும் தலைதூக்கவுள்ள மாபியாக்கள்; மின் துண்டிப்பின் பின்னணியிலுள்ள சதி!

புதிய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் நிலக்கரி, டீசல் மாபியாக்கள் தலைதூக்கவுள்ளன. இது மிகவும் கவலைக்குரியதாகும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலமான மின் உற்பத்திகளை வரையறுப்பதற்காக இலங்கை மின்சாரசபையின் சிரேஷ்ட பொறியியலாளர்களை உள்ளடக்கி விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் நிலக்கரி மற்றும் டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்வதற்காகவே அரசாங்கம் இவ்வாறானதொரு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்படுவதற்கு முதல் நாள், அதாவது கடந்த 7ஆம் திகதி இலங்கை மின்சாரசபையால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை, சூரிய மற்றும் நீர் மின்னுற்பத்திகளை வரையறுப்பது தொடர்பிலேயே அந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கமைய எதிர்காலத்தில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி திட்டங்களின் நிலைமை கேள்விக்குறியே.

எதிர்வரும் காலங்களில் இவற்றை முற்றாக இல்லாமலாக்குவதற்கான நடவடிக்கைகளையே தற்போது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

கடந்த காலங்களில் எம்மால் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட இந்த மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களே இன்று நாட்டில் பிரதான மின்னுற்பத்தி மூலங்களாகவுள்ளன.

இவை அனைத்தையும் சீர் குலைக்கும் வேலைத்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

எந்தவொரு முதலீட்டாளருக்கும் போட்டித்தன்மை இன்றி வலுசக்தி துறையில் அதிகாரத்தை வழங்க வேண்டிய தேவை கிடையாது.

அண்மையில் கூட விலைமனு கோரலின்றி நிறுவனமொன்றுக்கு 50 மொகாவோல்ட் காற்றாலை திட்டம் வழங்கப்பட்டது. இது முற்று முழுதாக விலைமனு கோரல் முறைமையை மீறிய மோசடி மிக்க கொடுக்கல் வாங்கலாகும்.

இந்த நிலைமையின் கீழ் அதானி மாத்திரமின்றி சகல சர்வதேச முதலீட்டாளர்களும் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.

கடந்த காலங்களில் மன்னார் காற்றலை மின்உற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு 5 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அதானி நிறுவனம் முதலீட்டு சபைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு ஏனைய முதலீட்டாளர்களும் சிந்திப்பர். என கூறியுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *