முகநூல்
அவதூறுகள் எம்மை அசைத்து விடாது!

ஆழமாக ஊடுருவி எமது சமூகக் கட்டமைப்புக்களையும் எதிர்கால சந்ததியையும் சீரழித்துக் கொண்டிருக்கும் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் எமது பணியாளர் ஒருவர் கைது செய்யப் பட்ட செய்தி ஒரு சில ஊடகங்களிலும் சமுக வலைத் தளங்களிலும் திரித்தும் இட்டுக் கட்டியும் வெளியிடப் படுகிறது.
இப்படியான சேறடிப்புக்கள் எனக்கும் எமது கட்சிக்கும் புதிய ஒன்று அல்ல.
இந்த சம்பவம் தொடர்பான சில தெளிவுபடுத்தல்களை எமது மக்களுக்கு வழங்க வேண்டிய தார்மீக கடப்பாடு இருப்பதாக உணர்கின்றேன்.
கடந்த சனிக்கிழமை (26/01/2025) யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதிப் பகுதியில் போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனும், அவரது சகோதரனும்,தாய் தந்தையை இழந்த அனாதரவான நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் என்னை அணுகி தங்களின் வாழ்வியல் அவலத்தை வெளிப்படுத்தி என்னிடம் உதவி கேட்டிருந்தனர்.
பெற்றோரை இழந்த பிள்ளைகள் எதிர்கொள்ளக்கூடிய அவலங்களை அறிந்தவன் என்ற அடிப்படையில், அவர்களுக்கான வேலை வாய்ப்பினையும் தங்குமிட வசதிகளையும் ஒழுங்குபடுத்தி
கொடுத்திருந்தேன்.
சில வருடங்களின் பின்னர் சம்மந்தப்பட்ட சகோதரர்கள் போதைபொருள் பாவனை, அது தொடர்பான செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதை அறிந்ததும், அவர்களை அதிலிருந்து மீட்டு நற்பிரஜைகளாக்குவதற்கான புனர்வாழ்வு பொறிமுறைகளுக்குள் அவர்கள் இணைத்து விடப்பட்டு, அதன் பின்னர் எமது கட்சித் தோழர்களால் அவதானிக்கப் பட்டும் வந்தனர்.
எனினும், எமது கண்காணிப்புக்களை மீறி அவர்கள் செயற்பட்ட நிலையில், குறித்த நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை பொலிஸாருக்கு வழங்கி வருவதுடன், போதைப் பொருள் பாவனை முற்றாக எமது மக்கள் மத்தியிலிருந்து அழிக்கப்பட வேண்டும் என்ற எமது வலியுறுத்தலையும் வழங்கி இருக்கின்றோம்.
அதற்கப்பால், சில சமூக ஊடகங்களில் வெளியாவது போன்று, எமது வாகனத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டது, சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது போன்ற செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை என்பதுடன், அவை எல்லாம், எம்மீதான வழக்கமான சேறடிப்புக்கள் என்பதையும் எமது மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
-டக்ளஸ் தேவானந்தா.
செயலாளர் நாயகம்,
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)