“சோஷல் மீடியா” வரமா? சாபமா?… நியூசிலாந்து சிற்சபேசன்


21ம் நூற்றாண்டிலே “ஸ்மார்ட்” (திறன்) தொழில்நுட்பம் கோலோச்சுகின்றது.
சாமானியனின் பார்வையிலே, “ஸ்மார்ட்” தொழில்நுட்ப உலகத்தின் வாசல்படி “ஸ்மார்ட்போன்” (திறன்பேசி) என்று சொல்லலாம்.
எங்கும் – எதிலும் – எப்போதும் “ஸ்மார்ட்போன்” என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
உயிர்வாழ்வுக்கு “ஒட்சிசன்” அவசியமில்லை. “ஸ்மார்ட்போன்” மட்டுமே அவசியம் எனத் “தவ்வல்களே” கற்பூரமடித்துச் சத்தியம் செய்கின்ற நிலை உருவாகிவிட்டது.
இத்தகையவொருநிலை படிப்படியாக ஏற்பட்டதல்ல. சடுதியாக ஏற்பட்டதாகும். அதனாலேயே, “கண்ணைக்கட்டிக் காட்டில்விட்டது” போன்றே பெருவெட்டிலான பயனாளிகள் காணப்படுகின்றனர். அதுவே, “தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்” என்னும் நிலை ஏற்படுவதற்கும்கூட காரணமாகிவிட்டது.
சாமானியர்களுடன் “ஸ்மார்ட்போன்” கைகோர்த்தபோது, “சோஷல் மீடியா”வின் (சமூகஊடகம்) எழுச்சி தவிர்க்கமுடியாததாகியது.
பூமிப்பந்தின் ஒருமூலையில் நடைபெறுகின்ற சம்பவம், கணப்பொழுதில், பிறிதொரு மூலையில் இருப்பவருக்குத் தெரிந்துவிடுகின்றது.
அன்றொருபொழுதில், யாழ் வீதியொன்றிலே வளர்ப்புநாயொன்று தனித்துவிடப்பட்டுப் பதறுவதாக “சோஷல்மீடியா” கூக்குரலிட்டது. அதனை அறிந்தபோது கனடாவிலேயொருவருக்குப் பதட்டம் தொற்றிக்கொண்டது. வீதி திருத்துவதற்காக வீதியோரம் குவிக்கப்பட்ட கட்டுமானப் பொருட்கள், விபத்தை ஏற்படுத்துவதாக ஒருவர் பதறுகின்றார். அவருடைய பதற்றம் எங்கெல்லாமோ இருப்பவர்களையும் தொற்றிக்கொள்கின்றது. இவ்வாறாக “சொடக்குப்” போடும் நேரத்தில் பரவுகின்ற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
எங்கோவொரு மூலையிலே நடைபெறுகின்ற நிகழ்வொன்றை, உலகெங்கிலுமிருப்போர், நேரடியாகப் பார்க்க முடிகின்றது.
சென்னையிலே நடைபெறுகின்ற மார்கழி இசைவிழாவை இலட்சக்கணக்கானோர் “நேரலையில்” பார்த்து மகிழ்வதாக மூத்த பாடகரொருவர் பெருமைப்படுகின்றார்.
தனிமனித சச்சரவுகள், அசகாயங்கள், போராட்டங்கள், மோதல்கள் என பல்வேறு விடயங்களையும் “சோஷல்மீடியா” வேகமாகக் காவித்திரிகின்றது. கணப்பொழுதில் தகவலைப் பரிமாறுகின்றது. சுழற்றிச் சுழற்றித் தகவலை அனுப்புகிறது. “வஞ்சகமில்லாமல்” எல்லாவற்றையுமே அள்ளி வீசுகின்றது. அதனால், பயனாளிகளும் எப்போதுமே பரபரப்பாக ஓடுகின்றனர்.
“சோஷல்மீடியா” என்பது எல்லைகளற்ற கடற்பரப்பு போன்றதாகும். அங்கே பகிரப்படுகின்றவற்றின் ஆரம்பமும் முடிவும் யாருக்கும் தெரிவதில்லை.
ஐம்பொன் விக்கிரகமொன்றிலே, பொன் எவ்வளவு சேர்மானம்? என்பது இலகுவில் கணிக்கக்கூடியதல்ல. அதேபோன்று, “சோஷல்மீடியா”விலே பகிரப்படுகின்ற தகவல்களிலே உண்மை, மிகைப்படுத்தல், பொய் போன்றவற்றின் அளவு இலகுவில் கணிக்கக்கூடியதல்ல.
பயனுள்ள தகவல்களும், பயனற்ற தகவல்களும், எவ்வித வேறுபாடுமின்றி, சகோதர வாஞ்சையுடன் கூடிவருகின்றன. அனுமதிகேட்டு உள்ளே வருவதில்லை. “ஸ்மார்ட்போன்” வழியாக உள்ளங்கைகளுக்கே வந்துகொட்டுகின்றன. பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
பகிரப்படுகின்ற விடயங்கள் ஆரம்பத்தையும் முடிவையும் கொண்டவை அல்ல. நாட்கள், வாரங்கள், மாதங்கள் மட்டுமல்ல வருடங்கள் கடந்தும்கூட சுற்றிச்சுழன்று கொண்டிருக்கக்கூடியன. அதனால், பகிரப்படுபவை “மார்க்கண்டேய” வரம் பெற்றுவிடுகின்றன.
பகிரப்படுகின்றவற்றை, அநேகர், கூர்ந்து கவனிப்பதில்லை. பழஞ்சோறு, புதுச்சோறு என்பவற்றுடன் அரிசியும் கலந்தேவருகின்றது. அதனையே மீண்டும் பகிர்ந்து விடுகின்றனர்.
பகிரப்படுகின்ற விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வது அசாத்தியமானது. இல்லாத ஊருக்கு வழி தேடுகின்ற சோலியாகிவிடக் கூடியதாகும்.
கொரோனாத்தொற்று காலகட்டத்திலே, தொற்றுப்பரவலுடன் மல்லுக்கட்டித் தொற்றுக்குறித்த வதந்திகள் பரவின.
அதுமட்டுமல்ல, மொழி, சமயம், இனம், அரசியல்கட்சி சார்ந்த வாதப்பிரதிவாதங்கள்,
நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ளப் புத்திமதி, பாட்டிவைத்தியம், நோயுற்று மீண்டவர்களின் அனுபவப்பகிர்வு என பலதும் பத்துமாகப் பகிரப்படுகின்றன.
ஆக, பகிரப்படுகின்றவிடயம் தொடர்பான பொறுப்பு யாருடையது? என்பது விடைகாணமுடியாத கேள்வியாகும்.
நேர்த்தியாகப் பகிரப்பட்ட விடயமொன்று, மீண்டும் மீண்டும் பகிரப்படும்போது திரிபடையலாம். மறுவளத்தில், உண்மைக்குப் புறம்பான அல்லது மிகைப்படுத்தப்பட்ட தகவல் திட்டமிட்டே பகிரப்படலாம். அந்தவகையிலே, “சோஷல்மீடியா” அடிமுடி காணமுடியாததாகும்.
ஒவ்வொருவரின் கைகளுடனும் சேர்ந்தே பிறந்தது போன்று, “ஸ்மார்ட்போன்” ஒட்டிக் கொண்டிருக்கின்றது. அதனால், விழித்துக்கொண்டு இருக்கும் வேளைகளிலெல்லாம் “சோஷல்மீடியா”விலே சாமானியர்கள் களமாடுகின்றனர்.
“பேஸ்புக்”, “இன்ஸ்டாகிராம்”, “டிக்டொக்”, “எக்ஸ்”, “லிங்டின்” என்ற முடிவில்லாத “சோஷல்மீடியா” வரிசையிலே, அந்தக்காலத்து அப்புவும் ஆச்சியும்கூட “வாட்ஸ்அப்” போன்ற பொட்டுக்குள்ளாலே எட்டிப்பார்த்து, எதை எதையோவெல்லாம் எறிந்துவிடுகின்றனர்.
அதனாலே “சோஷல்மீடியா”வின் ஊடுருவல் சக்தி அபாரமானதாகின்றது.
அதனை அரசு, அரசுசார்பற்ற மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மட்டுமல்ல, பாரம்பரிய மீடியாவும் நன்கு உணர்ந்துள்ளன. அதனாலேயே, அத்தகைய அமைப்புக்களும்கூட, “சோஷல்மீடியா”விலே, களமாடுகின்றன
உத்தியோகபூர்வ தகவல், விழிப்புணர்வுப் பிரச்சாரம் எனச் சகட்டுமேனிக்குத் தகவல்களை அள்ளிக் கொட்டுகின்றன.
ஆக, சாமானியர்களுடன் ஏட்டிக்குப் போட்டியாக நிறுவனங்களும் “சோஷல்மீடியா”விலே குவிந்திருக்கின்றன. அதனால், “ஸ்மார்ட்போன்” வழியாக உள்ளங்கைகளில் கொட்டப்படுகின்ற தகவல்களின் அளவுக்கு எல்லையே கிடையாது. அதனால், பயனாளிகளின் திண்டாட்டம் தொடர்கதையாகின்றது.
அதற்காக, “சோஷல்மீடியா”வைக் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அஃது, சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போலாகிவிடும்.
பாலையும் நீரையும் கலந்துவைத்தால், அன்னம் (சோறு) பாலினை உறிஞ்சிக்கொள்கின்றது. நீரைத் தள்ளி வைக்கின்றது.
அதேபோன்று, நல்லவைகளை எடுத்துக்கொள்ளவும், அல்லாதவைகளை தள்ளிவைக்கவும் பயனாளிகள்தான் பழகிக்கொள்ளவேண்டும்.
ஆக, பொறுப்பு பயனாளிகளிடமே விடப்படுகின்றது.
அகலத்தில் கடலாகவும், வேகத்தில் நீர்வீழ்ச்சியாகவும், உயரத்தில் வானமாகவும் “சோஷல்மீடியா” காணப்படுகின்றது.
அசகாய வேகத்துடன் தகவல்களைக் காவுகின்றது.
“சொல்வதைச்செய்யும் சின்னான்” போல ஓடியாடி ஓயாது இயங்குகின்றது.
பாரம்பரிய “மீடியா” வகுத்துவைத்திருந்த எல்லைகளை உடைத்தெறிகின்றது.
சமத்துவமான “மீடியா” பரப்பை உருவாக்க முற்படுகின்றது.
எல்லோருக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்துகின்றது.
உழைப்புக்கு வானத்தையே எல்லையாக்குகின்றது.
புதியதோர் உலகு படைக்க விளைகின்றது.
அந்தவகையிலே, “சோஷல்மீடியா” வரம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
![]()
மிக நடுநிலையான சுவையான ஓர் அலசல். காலத்திற்கேற்ற ஒரு பதிவு! “நல்லவைகளை எடுத்துக்கொள்ளவும், அல்லாதவைகளை தள்ளிவைக்கவும் பயனாளிகள்தான் பழகிக்கொள்ளவேண்டும்” போன்ற கருத்துகள் வலிமையானவை.
மிகவம் உண்மை. ஆராய்ந்து, அவதானித்து எழுதிய பதிப்பு.
எல்லோர் கைகளிலேயும் ஸ்மார்ட்போன் எப்போதும் காணப்படுகிறது. WhatsApp ஒன்றுமட்டுமே போதும் நேரத்தை போக்குவதற்கு.
Thanks Sabes
All innovation are the use of human beings. it all depend on how they are using it,It it is used by monkeys we how the outcome will be ,
With Best Regards
விஞ்ஞானத்தின் அதீத ணளர்ச்சி ஆபத்தானதே.மனிதர்களுக்கு அறிவியலலை ஊட்டுகிறோம் என்ற பெயரில் மனிதர்களை தம் எண்ணப்படி ஆட்டுவிக்கும் நூல் பாவைகளாக்கிக் கொண்எடிருக்கிறது.
மின்னியல் அலைகள் மனிதகுலத்தை சூழ்ந்து நிற்கின்றது.அளவுக்கு மிஞ்சிய விஞ்ஞான வளர்ச்சி ஆபத்தானதே தேவையற்றதுமஇகூட
ஏலையா முருகதாசன்
ஜேர்மனி
அற்புதம்
அற்புதமான பதிவு. உங்களது சீரிய பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.