மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் உலகம்: “அமெரிக்க நிர்வாகமே காரணம்“

இஸ்ரேல்-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவித்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறானதொரு மோசமான சூழ்நிலைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகமே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளார்.

தான் ஜனாதிபதியாக இருந்த சந்தர்ப்பத்தில் ஈரான் முழு கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறிய அவர் அவர்களுக்கு பணநெருக்கடியும் இருந்ததாக சுட்டிக்காட்டினார்.

இதனால், ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் மாத்திரமே அவர்கள் குறியாக இருந்ததாக கூறிய ட்ரம்ப் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியானதிலிருந்து ஈரானுக்கு நிதியை வாரி இறைத்தார். இதன் காரணமாக அவர்கள் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்கின்றனர் என்றும் குற்றம் சுமத்தினார்.

தனது ஆட்சி காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் போர் என்பது இருக்கவில்லை என்றும் அமெரிக்காவை வழிநடத்த திறமையில்லாத இருவரால் உலகம் இப்போது மூன்றாம் உலகப் போரின் விளிம்புக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இதனிடையே இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதித்தார்.

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டிக்கவில்லை என்றும் தீவிரவாதிகள் மற்றும்
கொலைகாரர்களுக்கு ஆதரவாக அவர் செயற்படுவதாகவும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதலை கண்டிக்காத எவரும் எங்கள் நாட்டு மண்ணில் கால் வைக்கக் கூடாது என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது அறிவிப்பைத் தொடர்ந்து அன்டோனியோ குட்டெரஸிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஆதரவு தெரிவித்தது.

மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் ஐ.நா.பொதுச்செயலாளர் அல்லது ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு கொள்ளாத எந்தவொரு முடிவும் எதிர்மறையானது என 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு சபை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

லெபனான் மீதான தாக்குதல் ஒருபுறம் இருக்க, காசா மீதும் இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு நடத்தி வருகிறது.

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இவ்வாறானதொரு சூழலில் நாளுக்கு நாள் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button