ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. அதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிடுவதாக இருந்தது.

இருப்பினும், அவரது உடல்நிலை காரணமாக அவர் போட்டியிடக்கூடாது என்று பலரும் அழுத்தம் கொடுத்தனர். இதன் காரணமாக அவர் கடந்த மாதம் ஜனாதிபதி ரேசில் இருந்து விலகினார். அவர் தற்போது துணை ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிந்தார்.

இதற்கிடையே ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படத் தேவையான அளவு வாக்குகளை அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உறுதி செய்துள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரை ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் உட்கட்சி தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள்.

அதன்படி நடந்த உட்கட்சி தேர்தலில் பைடன் போதுமான வாக்குகளைப் பெற்றிருந்தார். இதற்கிடையே அவர் அதிபர் ரேசில் இருந்து விலகிய நிலையில், புதிய ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.சுமார் 4,000 ஜனநாயக கட்சி பிரதிநிதிகளின் வாக்களிக்கும் இந்த உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.

பொதுவாக இந்தத் தேர்தல் பல நாட்கள் நடக்கும். ஆனால், அதிபர் தேர்தலுக்கு சில காலமே இருப்பதால் ஐந்து நாட்களில் இது நடத்தப்பட்டது. இதில் கமலா ஹாரிஸ் மட்டுமே வேட்பாளராக இருந்த நிலையில், அவர் அதிபர் வேட்பாளராகத் தேவையான வாக்குகளைப் பெற்றார். வரும் ஆகஸ்ட் 19 முதல் 22 வரை சிகாகோவில் ஜனநாயக கட்சி மாநாடு நடைபெறும் நிலையில், அதில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக இருப்பதில் தான் பெருமை கொள்வதாக 59 வயதான கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த வாரம் வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார். ஜோ பைடன் ஜனாதிபதி ரேசில் இருந்து விலகிய இரண்டே வாரங்களில் ஜனநாயக கட்சியின் முழு ஆதரவும் கமலா ஹாரிஸுக்கு கிடைத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button