பங்களாதேஷில் தீவிரமடையும் வன்முறை; பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற பங்களாதேஷின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்புக்களில் 30 சதவீதம் இட ஒதுக்கீடை வழங்கி வரும் நிலையில், நில ஒதுக்கீட்டில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி தலைநகரான டாக்காவில் ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இந்த போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சி மாணவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த இரு தரப்பு மோதலை தடுத்து நிறுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

இந்த மோதலில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நூற்றுக்கும் அதிகமான பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

பல்கலைக்கழகம் மட்டுமன்றி டாக்காவில் ஏனைய பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

டாக்காவில் அமைந்துள்ள பிரிவி (BTV) தொலைக்காட்சியின் தலைமைக் காரியாலயத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். குறித்த கட்டிடத்துக்குள் பலர் சிக்கிக் கொண்ட நிலையில், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதுவரை நடந்த ஒட்டுமொத்த போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. இந்த போராட்டம் காரணமாக, நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையறையின்றி மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் வசிக்கும் இந்தியர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button