பண்டத்தரிப்பு பிரான்பற்று சம்பவம் ; கண் பாதிப்புக்குள்ளான அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை (20) இரவு இடம்பெற்ற திருவிழாவில் அதிக ஒளிச்செறிவுடைய லேசர் விளக்குகள் மற்றும் அதிகளவிலான பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டமையால் கண் வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் 375 பேர் கடந்த வெள்ளிக்கிழமை (21) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றனர்.
தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் பின்னர் கண் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைவரும் நேற்று முன்தினம் சனிக்கிழமை வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
வீடு திரும்பியவர்கள் வைத்தியசாலையில் வழங்கப்பட்ட கண் மருந்துகளை மருத்துவ ஆலோசனைக்கு ஏற்பத் தொடர்ச்சியாகவும், முறையாகவும் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் சிகிச்சைப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![]()