முச்சந்தி

முல்லைத்தீவில் தமிழ் மக்களுடைய காணிகள் அபகரிப்பு: ”மணலாறு ” வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

முல்லைத்தீவில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரிக்கப்பட்டு 4238 சிங்கள மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை. ஏற்கனவே விடுதலைபுலிகள் மௌனிக்கப்பட்ட காலங்களிற்கு பின்னர் பூர்விகமான மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு சிங்களவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் வீட்டு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்தே வழங்கியிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 47,455குடும்பங்களும், மக்கள் தொகை 14,0931 ஆகவும் காணப்படுகின்றது. இவற்றில் தமிழர்களுடைய பூர்வீக இடங்களில் 4557 குடியமர்த்தப்பட்ட சிங்கள குடும்பங்களை சேர்ந்த 12545 பேரும், 1675 குடும்பங்களை சேர்ந்த 6382

முஸ்லிம் மக்களும் 41210 குடும்பங்களை சேர்ந்த 121799 தமிழ் மக்களும் உள்ளனர். தமிழ் மக்களுக்கு சொந்தமாகவிருந்த பூர்வீக நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதில் ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதுதவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28676 இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தமக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்துள்ளனர். அரசாங்கம் விண்ணப்பங்களை கோரிய போதிலும் இன்றுவரைக்கும் அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button