பிறந்தநாளில் யுவதியின் உயிரைப் பறித்த இராணுவ வாகனம்! – யாழில் சம்பவம்

யாழில் யுவதியொருவர் தனது பிறந்த தினத்தன்று  இராணுவ வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். புத்துர் – கனகம்புளியடி வீதி, வீரவாணி சந்தியில்  வீதியைக் கடப்பதற்காக  குறித்த யுவதி நின்றுள்ள நிலையில் வேகமாக வந்த இராணுவ வாகனமொன்று யுவதி மீது மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளை  அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை முல்லைத்தீவு – துணுக்காயிலிருந்து மல்லாவி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், மாங்குளத்திலிருந்து துணுக்காய் நோக்கி சென்றுகொண்டிருந்த காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற துணுக்காய் கல்விளான் பகுதியை சேர்ந்த டேவிட் நிஷாந்த் எனும் 28 வயதுடைய இளைஞர் ஆபத்தான நிலையில் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காரில் பயணித்த 4 வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *