உலகம்

எதற்கு.. ஹமாஸ் மீண்டும் ராணுவ கட்டமைப்பை உருவாக்கவா..? போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும், தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சமீபத்தில் கெய்ரோவில் நடந்த பேச்சுவார்த்தை நேற்று நிறைவடைந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் தனது குழுவை அனுப்பவில்லை என தெரிகிறது. இதனால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், ரபாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நோக்கி ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். கெரெம் ஷாலோம் எல்லையில் உள்ள இஸ்ரேல் வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 3 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 11 வீரர்கள் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்தார். இஸ்ரேல் வீரர்கள் வெளியேற வேண்டும், போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் கூறினார்.

“படைகளை திரும்ப பெற்று போரை நிறுத்தினால் ஹமாஸ் படையினர் தங்கள் பதுங்கு குழிகளில் இருந்து வெளியேறி, மீண்டும் காசாவைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அவர்களின் ராணுவ கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவார்கள். அத்துடன், இஸ்ரேல் குடிமக்களை அச்சுறுத்துவார்கள். இத்தகைய சூழ்நிலையை ஏற்க நாங்கள் தயாராக இல்லை” என்றார் நெதன்யாகு.

ரபா மற்றும் காசா முழுவதிலும் உள்ள மற்ற இடங்களில் சக்திவாய்ந்த நடவடிக்கை எடுக்கும் காலம் நெருங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் கேலண்ட் எச்சரித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தில் தீவிரமாக இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

காசாவின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள இஸ்ரேல் படைகள், தற்போது தெற்கு பகுதியில் உள்ள கடைசி இலக்கான ரபா நகரை முற்றுகையிட்டுள்ளன. அங்கு பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் நடவடிக்கையாக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். விரைவில் தரைவழி தாக்குதலுக்கும் தயாராகி வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் எச்சரிக்கைகள் செய்தபோதிலும், ரபாவில் ராணுவ தாக்குதலை நடத்துவதில் நெதன்யாகு உறுதியாக இருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.