‘நமாமி கங்கை’ திட்டம்: ஐ.நா., பிரதிநிதி புகழாரம்…
இந்தியாவின், மிகப்பெரிய நதியான கங்கை நதியை துாய்மைப்படுத்தும், ‘நமாமி கங்கை’ திட்டம், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது’ என, ஐ.நா., பிரதிநிதி புகழாரம் தெரிவித்து உள்ளார்.
தஜிகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து இணைந்து நடத்தும், ஐ.நா., நீர்வளத் துறை மாநாடு – 2023, ஐ.நா.,வில் 22ல் துவங்கியது.
மாநாட்டின் கடைசி நாளான நேற்று, நெதர்லாந்தின் சர்வதேச நீர் விவகாரங்களுக்கான சிறப்புத் துாதர் ஹென்க் ஓவிங்க் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நதியான கங்கை, முக்கிய நீரோடை களில் ஒன்று. இது, முக்கியமான வளத்தை எவ்வாறு கையாள்வது என்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
வளர்ந்து வரும் சமூகங்களின் சூழலில் நீர் எப்படியெல்லாம் பாதிக்கப்படலாம் என்பதை கங்கை நதி காட்டுகிறது. எனவே நதியிலும், அது தரும் வளத்திலும் முதலீடு செய்தால், நாம் உயிர் வாழ முடியும்.
தண்ணீருக்கு நெருக்கடி ஏற்பட்டு, அது தரும் சவால்களுடன் உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், அதிலிருந்து நாம் எப்படி விடுபடுவது என்பது குறித்த உத்வேகத்தை கங்கை நதியை துாய்மைப்படுத்தும், ‘நமாமி கங்கை’ திட்டம் வழங்குகிறது.
இந்த திட்டம், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. நீர்வளத் துறையில் முன்னோடியாக விளங்கும் இந்தியாவுடன் கூட்டணியில் இருப்பதால் எங்களுக்கும் உத்வேகம் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
![]()